மாப்பிள்ளை பார்ப்பதாக போன் போட்ட முறைபெண்.. மலேசியாவில் இருந்து பறந்து வந்து கொத்தி சென்ற முறைமாமன்
கரூர்: தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக அத்தை மகள் கூறியதை அடுத்து மலேசியாவிலிருந்து சிட்டாட்டம் பறந்து வந்தார் அந்த பெண்ணின் முறைமாமன்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த தெலுங்குபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் சரவணகுமார். பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது மலேசியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சரவணக்குமாரும் இவரது அத்தை பெண்ணான திருச்சி தாளகுடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரனின் மகள் சிந்தியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
காதலனுக்கு தகவல்
மகளின் காதலுக்கு சிந்தியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அந்த பெண்ணிற்கு வேறு ஒரு இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் சிந்தியாவுக்கு தெரியவந்தது. உடனே மலேசியாவில் உள்ள தனது காதலனுக்கு சிந்தியா தகவல் அளித்தார்.
பெற்றோர்
இதையடுத்து கடந்த 8ஆம் தேதி விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தார் சரவணக்குமார். இதையடுத்து இவரது பெற்றோர் முன்னிலையில் விராலிமலை முருகன் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தகவல் சிந்தியாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும் இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
திருமணம்
இதனால் அச்சமடைந்த காதல் ஜோடி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்துள்ளனர். சிந்தியாவின் பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், சரவணக்குமாரும் சிந்தியாவும் மேஜர், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மணமகன் வீட்டில் புதுமண ஜோடி
அவர்களுக்கு உங்களால் எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது என கூறி அவர்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நிம்மதியாக இருவரும் மணமகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.