செந்தில், இந்துமதி போல எல்லோரும் இருந்தால்.. புயல் என்ன.. சுனாமியே பயந்து ஓடிரும்!
புயல் நிவாரணத்திற்கு புதுமண தம்பதி உதவி உள்ளனர்.
Recommended Video
கரூர்: மாலையும் கழுத்துமாக வந்த தம்பதியை கரூர் மாவட்டமே பாராட்டி வாழ்த்தி அனுப்பியது.
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்காக அனைத்து தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது. புயல் பாதித்த மக்களுக்கு தமிழக அரசு முதல், நடிகர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், தனிநபர்கள் வரை நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கரூரில் புதுமண தம்பதியான செந்தில்-இந்துமதி ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தனர். அதன்படி தாலி கட்டிய கையோடு, புதுமணத்தம்பதியினர் மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டனர்.
கரூர் பசுபதீஸ்வரா அய்யப்ப சேவா சங்க கட்டிடத்தில்தான் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மண்டபத்திலிருந்து இந்த கல்யாண தம்பதி, நேராக இந்த கட்டிடத்துக்கு வந்து விட்டார்கள். வரும்போதே, தங்களது சொந்த செலவில், டெல்டா வாசிகளுக்கு போர்வைகள் துண்டுகள், சேலைகள் போன்றவற்றை கொண்டு வந்திருந்தார்கள். அவற்றினை நிவாரணபொருட்கள் திரட்டுபவர்களிடம் அளித்தார்கள்.
மணக்கோலத்தில் வந்து நிவாரண பொருட்களை அளித்த இருவரையும் எல்லோருமே பாராட்டினார்கள். மணமக்கள் கொடுத்த நிவாரண பொருட்களில் என்ன ஸ்பெஷல் என்றால், 800 பூரிகளை கொண்டு வந்திருக்கிறார்கள். இதனை ஒரு வாரத்துக்கு வைத்து சாப்பிடும் அளவுக்கு பதப்படுத்தி செய்யப்பட்டதாம்.