முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!
கரூர்: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசளிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு முன்னெடுத்து வரும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் அனைவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது?
அந்தவகையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்த வருபவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ்
மனித சமுதாயத்தை அச்சுறுத்தி ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸின் கோரப்பிடியிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். அப்படிப்பட்ட அருமருந்தான தடுப்பூசியை பலரும் அலட்சியமாக கருதி செலுத்திக்கொள்ள முன் வருவதில்லை. அரசு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தனிமனித விருப்பமும், அறிவியல் மீதான நம்பகமும் இருந்தால் தான் தடுப்பூசி முகாம்களை வெற்றியடைக்க வைக்க முடியும்.
தடுப்பூசி முகாம்கள்
தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் பேரூராட்சி நிர்வாகம் எதிர்பார்த்த அளவை விட குறைந்த எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்திருக்கிறார்கள். இதனால் மாற்றியோசி என்பதற்கேற்ப பொதுமக்களை கவரும் வகையில் பரிசுப்பொருட்களை கொடுத்து தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வை பேரூராட்சி அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
3 பரிசுகள்
முதல் பரிசாக குக்கர், இரண்டாம் பரிசாக ஹாட் பாக்ஸ், மூன்றாவது பரிசாக டிபன் பாக்ஸ் மற்றும் ஆறுதல் பரிசாக 25 நபர்களுக்கு சாப்பிடும் தட்டு வழங்கப்படும் என பள்ளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொண்டு பரிசுப் பொருட்களை அள்ளிச்செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பரிசுப் பொருட்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அசைவ உணவு
தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன்பும் செலுத்திக்கொண்ட பின்பு அசைவ உணவு சாப்பிட தடையில்லை என்ற தகவல் பள்ளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி மீதான அச்சம் காரணமாகவும், அதை செலுத்தினால் காய்ச்சல் வரும் என்பதாலும் பலரும் அதை செலுத்திக்கொள்ள முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.