முடிந்தால் முதலமைச்சர் படத்தை அகற்றி பாருங்கள்... செந்தில்பாலாஜிக்கு சவால் விடும் சாகுல்ஹமீது
கரூர்: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை மாட்டிய அதிமுக பிரமுகர் சாகுல்ஹமீது, முடிந்தால் இதனை அகற்றிப்பாருங்கள் என செந்தில்பாலாஜிக்கு சவால் விடுத்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக பள்ளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் படம் இல்லாத நிலையில் இப்போது புதிதாக பொருத்தியுள்ளார் சாகுல் ஹமீது.
இவர் செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் திமுக உட்கட்சி மோதல்... பல மாவட்டங்களில் பஞ்சாயத்து பேசும் கே.என்.நேரு
அரசு அலுவலகங்கள்
அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் படம் பொருத்தப்படுவது வழக்கமான ஒரு நடைமுறையாகும். இந்நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படம் இல்லாததை கண்டு அங்கு அவரது படத்தை மாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அதிமுக பிரமுகர் சாகுல்ஹமீது. செந்தில்பாலாஜியின் அரவக்குறிச்சி தொகுதிக்குள் வரும் பள்ளப்பட்டியில் அவருக்கு எதிராக மார் தட்டி நிற்கிறார் சாகுல் ஹமீது.
திமுக டூ அதிமுக
பள்ளப்பட்டியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அங்கு திமுகவின் செல்வாக்கு பலமாக உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பள்ளப்பட்டியில் 900-க்கும் குறைவான வாக்குகளே அதிமுகவுக்கு பதிவாகின. அதேநேரத்தில் திமுக கூட்டணி 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றிருந்தன. இதனால் தான் இந்த தொகுதியை கெட்டியாக பிடித்துக்கொண்டார் செந்தில்பாலாஜி. இஸ்லாமியர்கள் ஓட்டு திமுகவுக்கு விழும் என்பதால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் அங்கு களமிறங்க காய் நகர்த்தி வருகிறார்.
முதலமைச்சர் படம்
இந்நிலையில் பள்ளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் படத்தை மாட்டுமாறு அங்குள்ள ஊழியர்களிடம் அதிமுக பிரமுகர் சாகுல் ஹமீது கோரிக்கை விடுத்திருக்கிறார். அவர்களும் சரி மாட்டலாம் எனக்கூறிவிட்டு நாட்களை கடத்தியதால், முதலமைச்சர் படத்தை தாமே எடுத்துசென்று மாட்டிவிட்டு முடிந்தால் இந்தப் படத்தை செந்தில்பாலாஜியை அகற்றச் சொல்லுங்கள் என சவால் விடுத்திருக்கிறார் சாகுல்ஹமீது. இந்த கோபத்துக்கு காரணம் செந்தில்பாலாஜி பதவி பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றவில்லை கூறப்படுகிறது.
அதிமுகவில் சேர்ந்தார்
சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சாகுல் ஹமீது கடந்த மாதம் அதிமுகவில் மீண்டும் இணைந்துவிட்டார். இதற்கு காரணம் பள்ளப்பட்டி நகரச் செயலாளர் பதவி வாங்கி தருவதாக கூறிய செந்தில்பாலாஜி பின்னர் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே மற்றொரு காரணமும் கூறப்படுகிறது, செந்தில்பாலாஜியுடன் இருந்தால் செலவுகளை தன் தலையில் கட்டிவிடுவார் என்பதாலேயே சாகுல்ஹமீது அதிமுகவில் இணைந்துவிட்டார் எனக் காரணம் கூறப்படுகிறது.