காதெல்லாம் கூசுது.. ஆசிரியர்களே இப்படி பேசலாமா? தலைமையாசிரியரை திட்டி கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர்
கரூர்: ஆசிரியரை மற்றொரு ஆசிரியர் மது போதையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடும் ஆடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கல் சாலையில் மாநகராட்சி ஜெயப்பிரகாஷ் நடுநிலைப் பள்ளி அமைந்து இருக்கிறது.
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான செயல்படும் இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஆசிரியர்களுக்குள் மோதல்
இப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பதவி வகித்து வருபவர் ராஜலிங்கம். கணித ஆசிரியரான இவர் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் செல்வம் என்பவருக்கும், பொறுப்பு தலைமை ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்
இது தொடர்பாக பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடற்கல்வி ஆசிரியர் செல்வத்திற்கு ஆதரவாக பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ராஜலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டுளார். மது போதையில் இருப்பது போன்று பேசும் அவர், ராஜலிங்கத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

செல்போன் உரையாடல்
வெவ்வேறு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த இருவரும் தங்கள் சங்கம்தான் பெரியது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதை வேண்டும் என்றால் ரெக்கார்ட் செய்யுங்கள் என்றும், இல்லை நானே ரெக்கார்ட் செய்து தருகிறேன் எனவும் கூறி முடிகிறது அந்த செல்போன் உரையாடல் ஆடியோ. மாணவர்கள், மாணவிகள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சண்டை போட்டுக் கொள்ளும் சம்பவங்களும் ஆசிரியர்களை மாணவர்கள் கேலி கிண்டல் செய்வதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

தவறான முன்னுதாரணம்
இந்த நிலையில் மாணவர்களுக்கு அறநெறியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி சண்டையிட்டுக்கொள்வது தவறான முன்னுதாரணம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இரு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் தங்கள் சங்கம் தான் பெரியது எனவும் கெட்ட வார்த்தைகளாலும் பேசிக் கொள்ளும் இந்த ஆடியோ தற்போது ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.