ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு முதல்முறையாக ரூ.2 லட்சம் உதவித்தொகை... விவரம்
கரூர்: ஐஐடி, ஐஐஎம், என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் தமிழகத்தை சேர்ந்த பி.சி., எம்.பி.சி. மாணவ மாணவிகளுக்கு முதல்முறையாக கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான தகுதிகள் குறித்தும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கரூர் மாவட்ட ஆட்சியா் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ , மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவா் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்த தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவா்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக வரும் 31-ஆம் தேதிக்குள் இந்த கல்வி தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் 100 விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட்டால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்