கரூர் கலெக்டர் ஆபிஸ் கேட் முன்பு தீக்குளித்த இளைஞர்.. பரவும் பகீர் சிசிடிவி காட்சி!
கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அருகே இளைஞர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது
கரூர் - திண்டுக்கல் சாலையில் தாந்தோன்றிமலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. அப்பகுதிக்கு நள்ளிரவில் இளைஞர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தன்னைத் தானே தீ வைத்து எரித்துக் கொண்டுள்ளார். அது தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
அதில் நேற்று இரவு 11 மணி 13 நிமிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கேட்டின் முன்பாக தனக்குத்தானே அந்த இளைஞர் தீ வைத்துக் கொண்டது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட இளைஞர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் பகுதியை சார்ந்த பாஸ்கர் என்பதும், சுற்றுலா வேன் உரிமையாளர் என்றும், அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வாகனத்தையும், அதில் தன் கைப்பட எழுதிய கடிதம் மற்றும் செல்போனை வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. கரூர் கலெக்டர் ஆபிஸ் கேட்டின் முன்பாக தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்ட பாஸ்கரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.