மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்?
கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கும், செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வுக்கும் நாளுக்கு நாள் பனிப்போர் முற்றிக்கொண்டே போகிறது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தொடங்கிய இந்த மோதல் போக்கு இன்றும் தொடர்கிறது. தேர்தல் நேரத்திலும், இறுதிக்கட்ட பரப்புரையின் போதும் பல களேபரங்கள் கரூரில் அரங்கேறியது அனைவரும் அறிந்தவை.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தனது எண்ணை ப்ளாக் செய்து வைத்துள்ளதாக கரூர் எம்.பி.ஜோதிமணி அண்மையில் புகார் கூறியிருந்தார். மேலும், தங்கள் கோரிக்கை கடிதங்களை ஆட்சியர் பரிசீலிப்பதே இல்லை என செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வும் கூறி வருகிறார்.
அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள 1000 கன அடி தண்ணீரை 2,000கன அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் பாலாஜி ஆட்சியர் அன்பழகனுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிக்கு வந்து சேர்வதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அதற்குரிய ரியாக்ஷன் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வராததால், எங்கள் எம்.எல்.ஏ.கொதிப்படைந்துவிட்டார் எனக் கூறுகின்றனர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள். விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்த செந்தில்பாலாஜி, இது தொடர்பாக தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அங்கும் கிரீன் சிக்னல் கிடைத்து விட்டதால், மாவட்ட ஆட்சியரை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டார். அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை 3 நாட்களுக்குள் உயர்த்தாவிட்டால் கரூரில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என கெடுவிதித்துள்ளார்.