தொகுதிக்கு 25,000 திமுக வாக்காளர்களை நீக்க சதி... செந்தில்பாலாஜி பரபரப்புக் குற்றச்சாட்டு..!
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தலா 25,000 திமுக ஆதரவு வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் வெளியூர் ஊழியர்களை கரூருக்கு அழைத்து வந்து உள்ளூர் அதிமுகவினர் துணையுடன் திமுக ஆதரவு வாக்காளர்கள் யார் யார் என்ற புள்ளி விவரத்தை அதிமுக தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு ஓட்டுப் போடக்கூடியவர்களின் வரிசை எண்களில் வட்டம்போட்டு அதனை மாவட்ட ஆட்சியர் வசம் அதிமுகவினர் ஒப்படைத்துள்ளதாகவும், அதனை அப்படியே அவர் பூத் குழுவினருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். குறுக்கு வழியில் வெற்றிபெற்று விடலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகல் கனவு காண்பதாகவும் சாடியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் டிவி செய்தியாளர் வெட்டிக்கொலை - பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
இந்த விவகாரத்தை இப்படியே தாம் விடப்போவதில்லை என்றும் வாக்காளர் பட்டியலில் திமுக ஆதரவு வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என்றும், நீதிமன்றத்திற்கு செல்லவும் தாம் தயங்கமாட்டேன் எனவும் கூறியிருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தொகுதிகளிலும் தலா 25,000 வாக்குகள் என்றால் மொத்தமாக ஒரு லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க சதி நடப்பதாக தெரிவித்திருக்கிறார்.
செந்தில்பாலாஜி முன் வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டை பத்தோடு பதினொன்றாக கடந்துவிட முடியாது என்கிற வகையில் இருப்பதால் இதனை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் வரை கொண்டு செல்ல திமுக சட்டத்துறை நிர்வாகிகள் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.