ஜெ. இறப்புக்கு திமுகதான் காரணம்.. சசி குடும்பத்தை விட்டுக் கொடுக்காத தம்பிதுரை.. பரபர புகார்
Recommended Video
கரூர்: ஜெயலலிதா இறப்புக்கு திமுகதான் காரணம் என லோக்சபை துணை சபாநாயகர் தம்பிதுரை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தேவையில்லாத ஒன்று. இது குறித்து வரைவு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது புரியாத ஒன்றாக உள்ளது.
இதை கண்டித்து அதிமுக எம்பிக்கள் குரல் எழுப்பி வருகிறோம். இதனால் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவோம். பெங்களூரு மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்றால் ஒகேனக்கல்லில் அணை கட்டிக் கொள்ளலாம். இங்கு மின் உற்பத்தியும் செய்ய முடியும்.
வேடிக்கை
ஆனால் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி இது போன்று அணை கட்டும் திட்டத்தை கையில் எடுக்கிறது. அந்த கூட்டணியில் திமுகவும் உள்ளது. அதாவது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு மேகதாது அணை கட்டுவதை தடுப்போம் என ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழகத்தை ஆள முடியாது
வரும் பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும். நாடாளுமன்றத்தில் 3-ஆவது பலம் பொருந்திய கட்சியான அதிமுகவே பாரத பிரதமரை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றும். ஆனால் பாஜகவோ காங்கிரஸோ இனி தமிழகத்தை ஆள முடியாது.
வந்தாரா ஸ்டாலின்
கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் பார்வையிடாதது ஏன் என ஸ்டாலின் கேட்கிறார். ஏன் ராகுல் மட்டும் வந்து பார்வையிட்டாரா. இவ்வளவு ஏன் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் புயல் பாதிப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் வந்தாரா.
மக்கள் பாடம்
ஜெயலலிதா இறப்புக்கு திமுகதான் காரணம். சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்ததன் மூலம் பெங்களூர் சிறை சென்ற அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் மேல் முறையீடு செய்து அவரை சிறையில் அடைக்க திமுகதான் காரணம். இதற்கு வரும் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என்றார் தம்பிதுரை.
விசுவாசி
ஜெயலலிதா இறப்புக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர்தான் என தம்பிதுரை சார்ந்த அதிமுகவே கூறி வருகிறது. ஆனால் தம்பிதுரையோ திமுக மீது பழியை சுமத்துவது, சசிகலா குடும்பத்துக்கு அவர் இன்னும் விசுவாசியாகவே இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.