புரோகிதர் பதவி கூட இல்லாமல் அம்போவென நிற்கிறார் திருநாவுக்கரசர்- தம்பிதுரை
கரூர்: புரோகிதர் பதவிக் கூட இல்லாமல் அம்போவென திருநாவுக்கரசர் நிற்கிறார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்த வாய்களில் ஒன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ரபேல் விவகாரத்தில் இவர் போட்ட போடை ராகுல்காந்தி மேஜையை தட்டி வரவேற்றார்.
அது மட்டுமல்லாமல் காவிரி விவகாரத்திலும் , மேகதாது பிரச்சினையிலும் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணி குறித்து தம்பிதுரையிடம் கேட்ட போதெல்லாம் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றார்.
சொந்த கருத்து
இதற்கு நியாயமாக பொங்க வேண்டிய அதிமுக தலைமை பேசாமல் இருக்க பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனோ தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல. இது அவரது சொந்த கருத்து என கூறிவிட்டார்.
அந்தர் பல்டி
அதிமுக பாஜக கூட்டணி நேற்று இறுதி கட்டமாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து தம்பிதுரை தனது நிலைப்பாட்டிலிருந்து அந்தர் பல்டி அடித்தார்.
தம்பிதுரை அட்டாக்
இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில் அதிமுக- பாஜக கூட்டணி என்பது கட்டாய கல்யாணம் என்றார். இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரையிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறுகையில் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்க திருநாவுக்கரசர் என புரோகிதரா?
50 ஆயிரம் கோடி
புரோகிதர் பதவிக் கூட இல்லாமல் திருநாவுக்கரசர் அம்போவென நிற்கிறார். அரசியலில் எதிர்க்கட்சிகளாக இருந்த அதிமுகவும் பாஜகவும் தற்போது நட்பு கூட்டணியாக உருவாகியுள்ளது. இனி தமிழகத்துக்காக பாஜகவிடம் 20 ஆயிரம் கோடி அல்ல, 50 ஆயிரம் கோடி கூட நிதி கேட்கலாம்.
விரக்தி
அதிமுக- பாஜக கூட்டணியால் மக்களுக்குத்தான் லாபம். ஸ்டாலினுக்கு ஒரு தலைவர் போல் பேச தெரியவில்லை. ஏதோ விரக்தியில் பேசுகிறார் என்றார் தம்பிதுரை.