அமமுக தான் பிரதமரை முடிவு செய்யும்... முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆரூடம்
கரூர்: அதிமுகவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விலகி திமுகவில் இணைந்துள்ளார். இந்தநிலையில், அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே சோர்வு ஏற்பட கூடாது என்பதற்காக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் அதிமுக முன்னாள் கொறடா மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சுமார் 200-பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பழனியப்பன் கூறியதாவது: உண்மையான அதிமுகவாக அமமுக தான் இருக்கிறது. உண்மையான தொண்டர்கள் இங்குதான் இருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் இருப்பவர்கள் தான் இங்கு வந்து சேரவேண்டும். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு வளர்ந்தவர் செந்தில்பாலாஜி. இன்று திமுகவிற்கு சென்றதால் அம்மாவின் புகைப்படத்தை கூட பாக்கெட்டில் வைக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். இதனால் தான் தினகரன் திமுகவுக்கு சென்றதற்கு பதிலாக அதிமுகவிற்கே சென்றிருக்கலாம் என்று கூறினார் என்றார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காது. 40-இடங்களில்லும் அமமுக போட்டியிட்டு வெற்றி பெறும். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரிக்கும் கட்சி தான் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் என்றார்.