போக்குவரத்து அமைச்சரின் மாவட்டத்திலேயே ராத்திரி 10 மணிக்கு மேல் பஸ் இல்லை!
கரூர்: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இரவு 10 மணிக்குமேல் பேருந்து வசதி இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் தென்பகுதி திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே முடிகிறது. வையம்பட்டியில் இருந்து கரூருக்கு செல்ல அம்மாவட்டத்தின் மையப்பகுதிகளைக கடந்துதான் செல்ல வேண்டும்.
குறிப்பாக வையம்பட்டி அடுத்து பாலவிடுதி, தரகம்பட்டி, உப்பிடமங்கலம், புலியூர் வழியாக கரூரைச் சென்றடைகிறது இந்த வழித்தடம். இந்த வழித் தடத்தில் பகல் நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற கணக்கில் பேருந்து வசதி உள்ளது. ஆனால், வையம்பட்டியில் இருந்து வரும் அனைத்துப் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
பேருந்து வசதி கோரும் மக்கள்
ஆகையால் பகலில் அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அத்துடன் இப்பகுதி மக்கள் மணப்பாறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை என எந்த நகரங்களுக்குச் சென்றாலும் இரவு 9 மணிக்குள் வையம்பட்டி வந்தால்தான் அன்று இரவு வீட்டிற்குச் செல்ல முடியும். இல்லையென்றால் வையம்பட்டியிலேயே அந்த இரவை கழிக்க வேண்டியதுதான்.
9 மணியுடன் முடிந்தது கடைசி பேருந்து
ஏனென்றால், வையம்பட்டியில் இரவு 9 மணிக்குத்தான் கரூருக்கு கடைசிப் பேருந்து. அந்தப் பேருந்தை விட்டால் அன்று இரவு வையம்பட்டியில்தான் தங்கியாக வேண்டும். இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மணப்பாறை, திருச்சி போன்ற ஊர்களுக்கு மருத்துவ வசதி போன்றவற்றிற்காக சென்று வரும் மக்களுக்கும் இதே நிலைதான். அவர்கள் இரவு முழுவதும் வையம்பட்டியிலேயே தங்கி அடுத்தநாள் காலை 5.30 மணிக்கு வரும் பேருந்தில்தான் வீடு போய் சேர முடியும். (கார் வாடகைக்கு எடுத்தால் குறைந்தது 200 ரூபாய் ஆகும்.)
இரவுநேரப்பேருந்து வேண்டும்
சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைமைதான் இப்பகுதியில் நிலவுகிறது. எவ்வளவு போக்குவரத்து வசதிகள் வந்தும் இன்னும் இந்தப் பகுதிக்கு இரவுப் பேருந்து வசதி இல்லாததது இந்தப் பகுதி மக்களின் பெரும் குறையாகவே உள்ளது.
அமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் நிறைய புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறார். ஆனால், இந்த பழைய வழித்தடமான வையம்பட்டியில் இருந்து கரூருக்கு இரவு நேரங்களில் பேருந்து வசதியை செய்து தந்தார் என்றால் அவர் அப்பகுதி மக்களின் பாராட்டு மழையில் நனைவார் என்பதோடு அல்லாமல். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அவருக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.