வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்... செந்தில் பாலாஜி தடாலடி
கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் விதமாக, 25 ஆயிரம் பேருக்கு மூன்று சென்ட் வீட்டுமனை இலவசமாக வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி பேருந்து நிலையம், ஈத்கா பள்ளிவாசல், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்னும் என்ன தயக்கம்.. இறங்கி அடிக்கலாமே கமலும், சீமானும்
பிரச்சாரத்தின் போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்வி கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட 25 ஆயிரம் மக்களுக்கு 3 செண்ட் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அரவக்குறிச்சி பேரூராட்சி தமிழகத்திலேயே முன்மாதிரியான பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். முன்னதாக, அரவக்குறிச்சி இடைத் தேர்தலில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றும் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.