தெள்ளு தமிழில் முழங்கிய அதே வாய்.. தீயாய் கொதித்தெழுந்த அந்த நிமிடம்.. யார் இந்த லயா?
கரூர்: தூய தமிழில் அடுக்கடுக்காக பேசி மிகப் பெரிய அளவில் புகழ் பெற்ற டிக்டாக் புகழ் லயா தர்மராஜ், தனது சகோதரிக்கு நீதி கேட்டு திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியபோது பலரும் ஆச்சரியத்துடன் அதை வேடிக்கை பார்த்தனர்.
லயா, டிக்டாக்கில் நிறைய ஊக்கமளிக்கும் பேச்சுகளை கொடுப்பார். இவரது தமிழ் கேட்கவே காதுகளுக்கு இனிமையாக இருக்கும். டிக்டாக் எனும் சமூக வலைதள செயலி நமது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது நடைமுறையில் இருந்த வரை பெண்கள், ஆண்கள் என அனைவரும் இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.
ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி
இந்த செயலி மூலம் பலர் நல்ல முறையில் திறமைகளை வெளிப்படுத்தினர். பலர் ஆபாசம், அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த பேச்சுகள், ஆபாச நடனம், ஆபாச செய்கைகள் என பேசி தங்களுக்கு சப்ஸ்கிரைபர்களை அதிகரித்தார்கள்.
செயலிக்கு தடை
இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளதால் இதிலிருந்தவர்கள் தற்போது யூடியூப் சேனலை தொடங்கி அதன் மூலம் தங்கள் "திறமைகளை" வெளிப்படுத்தி வருகிறார்கள். நிறைய பேர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி யாரும் முகம் சுளிக்காத அளவுக்கு நடந்து கொள்கிறார்கள். ஆனால் சிலர் செய்யும் அலப்பறைகளால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு நடந்து கொண்டுள்ளார்கள்.
தற்கொலை எண்ணம்
ஊக்கமளிக்கும் பேச்சுகள், தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடும் பேச்சுகள், சமூக பொறுப்புணர்வு பேச்சுகள் என புகழ்பெற்றவர்தான் கரூர் லயா. பாய்ஸ் கட் செய்து கொண்டு புடவை, அதற்கு மேட்சிங்கில் நகை என நல்லவிதமாக டிரஸ் செய்து கொண்டு யாரும் முகம் கோணாத அளவுக்கு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரது தமிழ் கேட்பதற்கே மிகவும் இனிமையாக இருக்கும் கொங்கு தமிழ் கலந்திருக்கும் இவரது பேச்சுக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளார்கள்.
எஸ்பி அலுவலகம்
நேற்று திண்டுக்கல்லில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சகோதரிக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்தார் லயா.. இவர் அழகு தமிழில் பேசித்தான் பலரும் பார்த்துள்ளனர். ஆனால் அனல் பறக்க போராட்டக் களத்தில் குதித்து ஆவி பறக்க இவர் பேசியதைப் பார்த்த பலருக்கும் ஆச்சரியம்தான். லயாவைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்..
நினைப்பது எல்லாம் நடக்குமா
இவர் ஒரு வீடியோவில் பேசுகையில் "நினைப்பது எல்லாம் நடக்குமா என நினைத்தால் அது நடப்பதில்லை. எதெல்லாம் நடக்கக் கூடாது என நினைக்கிறோமோ அது நடந்துவிடுகிறது. மனைவியோ காதலியோ தான் சொல்வதற்கெல்லாம் ஆண்கள் தலையாட்ட வேண்டும் என நினைப்பார்கள் பெண்கள். ஆனால் ஆண்களோ, நமது மனைவியோ காதலியோ சண்டைக்கு பிறகு பேசிவிடுவார்களா என எதிர்பார்ப்பார்கள். அப்பாவியான ஒரு வாழ்க்கையும் வேண்டாம். அடப் பாவி என சொல்லும் வாழ்க்கையும் வேண்டாம். அப்பாடா என சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டால் போதும் என்பதுதான் 90 சதவீத மக்களுடைய எதிர்பார்ப்பு ஆக உள்ளது.
விழுந்து விழுந்து வேலை
நாம் எல்லாரும் செய்யக் கூடிய ஒரு தவறு எதுவாக இருக்கும் என்றால், பிடித்தவர்களுக்காக விழுந்து விழுந்து வேலை செய்வதுதான். எப்போதுமே அன்பை கூட அளவோடதான் கொடுக்க வேண்டும். ஒருவரிடம் நாம் அன்பு செலுத்துகிறோம் என்றால் அது தர்மம் போடுவது போல்தான். போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டும். அது நமக்கு திரும்பி கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அவமானம் நமக்குதான். நிறைய நேரங்களில் நமக்கு பிடித்தவர்களுக்காக நேரம், உழைப்பு, பணம் எல்லாவற்றையும் கொடுத்திருப்போம். ஆனால் அதை நினைத்து பார்க்க முடியாமல் செய்தவர்களிடம் இருந்து ஒரு கேள்வி வரும்- அதென்னவென்றால் "நீ என்ன பண்ணீட்டே". அப்போது நாம் உடைந்து போய் உட்கார்ந்து விடுவோம். அதனால் அன்பையும் அளவோட கொடுக்கலாம். வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் யாரையும் வெறுக்காதீர்கள். குறைவாக எதிர்பாருங்கள், அதிகமாக கொடுங்கள். எப்போதும் சிரியுங்கள், சிரிக்க வையுங்கள். எப்போதும் இறைவனை நினைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவுக்கு நிறைய உதவி செய்யுங்கள்" இப்படியாக இவர் கொடுக்கும் மோட்டிவேஷனல் பேச்சுகளை அளித்து வருகிறார்.
விளையாட்டு
அது போல் கொரோனா, விளையாட்டு என பல்வேறு பிரிவுகளில் அவர் பேசும் பேச்சுகளும் பிரபலம். நிறைய செஃல்ப் மோட்டிவேஷனல் ஸ்பீச்களையும் இவர் கொடுத்துள்ளார். அதில் ஒரு கோயிலில் ஒரு பிச்சைக்காரர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நிறைய காசுகள் கிடைக்கவில்லை என்பதால் அவர் டாஸ்மாக் கடை முன்பு உட்கார்ந்தார். அங்கு அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது, கூடவே மதுவும் கிடைத்ததாம். அப்போது அந்த பிச்சைக்காரர் சொன்னாராம், கடவுளே நீ இங்கேயா (டாஸ்மாக் கடையில்) இருக்கிறீர்கள். நான் கோயிலில் இருப்பதாக நினைத்தேனே என்கிறார் லயா.
நாட்டில் சட்டம் ஒழுங்கு
இதுகுறித்து ஒரு வீடியோவில் அவர் பேசுகையில் "நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் மின்னல் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லையே என யாரும் கவலை கொள்வதில்லை. ஜன்னல் வெளிச்சமாவது வருகிறதே என சந்தோஷப்படுகிறார்கள். என் வீட்டு தோட்டத்தில் பட்டாம்பூச்சியே வருவதில்லையே என யாரும் வருத்தப்படமாட்டார்கள். நம் சமையலறையில் கரப்பான்பூச்சி வருவதில்லை என சந்தோஷப்படுவார்கள். என்னால் பால்கனியில் நிற்க முடியலையே என கவலைப்பட வேண்டாம். கடவுள் என்னை தெருக்கோடியில் நிற்க வைக்கவில்லை என சந்தோஷப்பட வேண்டும் என பேசியுள்ளார்.
லயா
இவ்வாறு தனது பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் பேச்சுகளால் லயா மிகவும் பிரபலமானவர். இவர் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார். சமூகவலைதளங்களில் கலக்கி வந்த லயா நேற்று திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் தனது சகோதரியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தர்ணா போராட்டத்தால் எஸ் பி அலுவலகமும் பரபரத்தது.
யார் இந்த டிக்டாக் லயா
இவரை டிக்டாக் சூப்பர்ஸ்டார் என அழைக்கிறார்கள். இவர் தன்னை ஸ்டைலிஷ் தமிழச்சி என்றும் கவிதை வாசிப்பாளர் என்றும் அழைப்பார். தமிழ் மீது லயாவுக்கு மிகவும் ஆர்வம். அவர் கவிதைகளையும் எழுதுவார். கவிதை மூலம் அவரது கருத்துகளை சமூகவலைதளங்களில் கொட்டி வந்தார். மிகவும் தைரியமான பெண். குறுகிய நேரத்தில் எந்த துறை குறித்தும் கவிதை உடனுக்குடன் சொல்வதில் வல்லவர். இவர் ஆங்கர், மாடலாகவும் அறியப்படுகிறார். இவருக்கு டிக்டாக்கில் 544.9K பாலோயர்கள் இருந்தனர். இவரு விஜே லயா என்ற யூடியூப் சேனலில் 19 K சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கிறார்.