வீடில்லா ஏழைகளுக்காக உதயசூரியன் நகர் திட்டம்.. 3 சென்ட் நிலம் இலவசம்.. செந்தில் பாலாஜி உறுதி
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ள திமுக-வை சேர்ந்த செந்தில் பாலாஜி, வீடில்லாத ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற தமது வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. பின்னர் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்ட சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டார். பின்னர் அத்தொகுதியில் போட்டியிட ஏப்ரல் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி.
முதல் நாளே அதிரடி.. புதிய கேபினட் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
இதனையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், 25 ஆயிரம் வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச நிலம் வழங்கப்படும், 100 நாள் வேலை செய்பவர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதை மாற்றி உடனுக்குடன் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகளை அளித்தார்.
இதில் அவர் அறிவித்த ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் குறித்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சித்தனர். ஆனால் அரவக்குறிச்சி மக்களிடம் இந்த வாக்குறுதி கலவையான விமர்சனத்தை பெற்றது. இறுதியில் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியும் ஏற்றுவிட்டார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில் அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தார். மக்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ செந்தில் பாலாஜி, இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வீடில்லா ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன்.
நிச்சயமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி தெரிவித்தார். இதற்காக உதயசூரியன் நகர் என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறினார். உதயசூரியன் நகர் என்ற பெயரில் வீடில்லா 25,000 ஏழை குடும்பங்களுக்கு, 3 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.
பின்னர் அவருடன் இருந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசுகையில், அரவக்குறிச்சியில் தமிழக முதல்வரே பொறுப்பேற்று தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டார். பல அமைச்சர்கள் பணபலத்துடன் களமிறக்கப்பட்டனர். இருந்தும் செந்தில் பாலாஜி தான் வென்றார். அதிமுக தோல்வியை தழுவியது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.