அரவக்குறிச்சி தேர்தல்: சென்னையில் இருந்து 4 பேருந்துகளில் படையெடுத்து வந்த பள்ளபட்டி வாக்காளர்கள்!
Recommended Video
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 4 ஆம்னி பேருந்துகளில் வாக்களிக்க வாக்காளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவை பார்வையிட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வந்திருந்தார். அவரை வரவேற்க திமுக தொண்டர்களும் ஏராளமானோர் திரண்டனர்.
மனிதாபிமானம் இல்லாமல் காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர்... செந்தில் பாலாஜி ஆவேசம்
பாதிப்பு
இதனால் அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு நாங்கள் வாக்குச் சாவடியிலிருந்து 300 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தானே நிற்கிறோம். இங்கிருந்து ஏன் வெளியேற வேண்டும். இதனால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது என கேள்வி எழுப்பினர்.
மடக்கி விசாரணை
இதையடுத்து திமுக தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பள்ளப்பட்டி அண்ணா நகரில் 4 ஆம்னி பேருந்துகளில் மக்கள் கூட்டமாக வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை மடக்கி விசாரித்தனர்.
ஐஜி விசாரணை
இதில் அவர்கள் சென்னையிலிருந்து பள்ளப்பட்டிக்கு வாக்களிக்க வந்ததாக கூறினர். மேலும் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்ததை எடுத்துக் காட்டினர். ஆனாலும் போலீசார் விசாரணை நடத்துகிறோம் என கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
அலைக்கழிப்பு
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இதுபோல் 4 ஆம்னி பேருந்துகளில் இருந்து வாக்காளர்கள் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களை விசாரணை என்ற பெயரில் போலீஸார் அலைக்கழிப்பதாக அந்த மக்கள் குற்றம்சாட்டினர்.