துரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்!
தங்க தமிழ்செல்வனுக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்
Recommended Video
கரூர்: இன்னும் அதிமுகவில் சேரவே இல்லை.. அதற்குள் "துரோகியை சேர்க்கக்கூடாது" என்று தமிழகம் முழுவதும் தங்க தமிழ்செல்வனுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு நாட்களாக தங்க தமிழ்செல்வன் விவகாரம்தான் தமிழக அரசியலில் சுழன்று சுழன்று வருகிறது. எந்த கட்சிக்கு இவர் போக போகிறார், திமுகவா, அதிமுகவா என்ற விவாதங்கள் எழுந்து வருகின்றன.
அதே சமயத்தில், தாய்க்கழகமான அதிமுகவில்தான் இவர் இணைய போகிறார், குறிப்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தான் தங்க தமிழ்செல்வனை இயக்குகிறார்கள் என்றும் அதனால் அவர் விரைவில் அதிமுகவில் இணைய நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.
அதே சமயம், தங்க தமிழ்செல்வனுக்கும் ஓபிஎஸ்-க்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், துணை முதல்வர் இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், தேனியில் தன்னையும், தன் மகனையும் அளவுக்கு அதிகமாக தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்ததுதான்.
இப்படி ஒரு குழப்பமான நிலையில், தமிழகம் முழுவதும் தங்க தமிழ்செல்வனுக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த போஸ்டரில், "கட்சிக்கு துரோகம் செய்த தங்கதமிழ்செல்வனை கழகத்தில் இணைக்காதே... ஜெயலலிதா ஆட்சியை மழிக்க நினைத்த துரோகி தங்கதமிழ் செல்வன்... அம்மா ஆன்மா தங்கதமிழ் செல்வனை ஒரு போதும் மன்னிக்காது" என்று போஸ்டர்களில் வார்த்தைகள் தெறிக்கின்றன.
கழகத்தின் விசுவாசிகள் என்று 4 பெயர் போஸ்டரில் அச்சிடப்பட்டிருந்தாலும், இவர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களா என்பது தெரியவில்லை. ஆனால் திருச்சி மற்றும் கரூரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அரசியலில் அனல் பறக்கிறது.