கிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்
விதவை உதவி தொகை விண்ணப்ப படிவத்தை கிழித்து எறிந்துள்ளார் அரசு டாக்டர்
கரூர்: "டாக்டர்.. கிழிக்காதீங்க... கிழிக்காதீங்கன்னு கேட்டேன்.. ஆனாலும் கிழிச்சு என் மூஞ்சியிலேயே வீசியெறிஞ்சிட்டாரு" என்று விதவை பெண் ஒருவர் கண்ணீர் மல்க கூறுகிறார். விதவை உதவி தொகை பெற கையெழுத்து வாங்க போனபோது, அதற்கான விண்ணப்பத்தை கிழித்து எறிந்துள்ளார் ஒரு அரசு டாக்டர்.
கரூர் ஆதி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் சுசீலா. இவரது கணவர் சிவானந்தம், சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார்.
அதனால், அரசு தரும் விதவை உதவித் தொகையை வாங்கலாம் என்று சுசீலா விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தில், விண்ணப்பதாரரின் வயது, உடல் நலத்தகுதி குறித்து டாக்டர் அளிக்கும் சர்ட்டிபிகேட் இணைத்து தர வேண்டும்.அதற்காக அப்ளிகேஷனை
இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, டாக்டரிடம் கையெழுத்து வாங்க சுசீலா கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்குள்ள டாக்டர்களிடம் கையெழுத்து கேட்டுள்ளார். ஆனால் ஒருத்தரும் போடவில்லை. அதற்கான பதிலையுடம் சொல்லாமல், ஆஸ்பத்திரிக்குள்ளேயே ரொம்ப நேரத்துக்கு அலைய விட்டுள்ளனர். பிறகு கடைசியாக புவனேஸ்வர் என்ற டாக்டர் வரவும், அவரிடம் சென்று கையெழுத்து கேட்டுள்ளார்.
ஆனால், அவரும் விண்ணப்ப படிவத்தை கிழித்து எறிந்துவிட்டு சென்றுவிட்டுள்ளார். இந்த நேரம் பார்த்து, கலெக்டர் அன்பழகன் ஆஸ்பத்திரிக்கு திடீர் ஆய்வுக்கு வந்திருந்தார். இதனால் சுசீலா நேரிடையாக கலெக்டரிடமே சென்று விண்ணப்பத்தை கிழித்து எறிந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க புகார் தந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் சுசிலா பேசியபோது, "ஆஸ்பத்திரியில ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாருங்க.. விதவைத்தொகைக்கு கையெழுத்து வாங்க இங்க வந்தேன். ஒன்றரை மணி நேரமா அலையறேன்.. யாருமே கையெழுத்து போடல.. நான் போட மாட்டேன், நீ மாட்டேன்னு ஒருத்தருக்கொருத்தர் சொல்லிட்டாங்க. அதுக்கு ஏன்னு நான் கேட்டேன்.
எல்லாருமே இப்படி சொன்னீங்கன்னா எப்படி, கையெழுத்து போடுங்க சார், கையெழுத்து போடுங்கன்னு புவனேஸ்வர்ன்னு ஒரு டாக்டர்கிட்ட கேட்டேன். உடனே இதை வாங்கி கிழிச்சி.. உங்களுக்கெல்லாம் நேரம் காலம் இல்லையா?ன்னு சொல்லி என் மூஞ்சியில வீசியெறிஞ்சிட்டாரு.. எங்க வேணும்னாலும் போயி ரிப்போர்ட் தந்துக்குங்கன்னு சொன்னாரு. கிழிக்காதீங்க சார்.. என் கையில குடுங்கன்னு கேட்டுட்டே இருக்கேன்.. ஆனாலும் கிழிச்சுதான் தந்தாரு" என்றார்.