"அற்புதமான மனசு.. ஆழமான காதல்.. எனக்கு எல்லாமே பவித்ராதான்".. கூடிவந்து வாழ்த்திய உறவுகள்!
4 அடி உயர நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார் இளம்பெண்
கரூர்: "இனி எனக்கு எல்லாமே பவித்ராதான்.. அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை" என்கிறார் விக்னேஷ்வரன்.. இந்த காலத்தில்.. இப்படி ஒரு பெண்ணா என்று பவித்ராவை பார்த்து ஆச்சரியத்தில் உள்ளனர் விக்னேஷ்வரனின் உறவுகள்!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா... 23 வயதாகிறது.. டி.பார்ம் படித்து வருகிறார்.. படித்துக் கொண்டிருந்தபோது, ஃபேஸ்புக்கில் விக்னேஷ்வரன் என்ற இளைஞர் நட்பாகி உள்ளார்.
விக்னேஷ்வரன் பிசிஏ டிகிரி படித்துவிட்டு, வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார்.
ஃபேஸ்புக்
வீட்டில் செய்த தொழில் என்றாலும் அதை எப்படி அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போவது என்று நினைத்து, அதே தொழிலை ஃபேஸ்புக்கில் விரிவுபடுத்த முயன்றுள்ளார். அப்போதுதான் பவித்ரா அறிமுகமானார்.. நல்ல நட்பு அறிமுகமானது.. மனம்விட்டு நிறைய விஷயங்களை இவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில்தான் விக்னேஷ்வரன் உருவம் பற்றின விவரம் பவித்ராவுக்கு தெரியவந்தது.
4 அடி
அவர் சுமார் 4 அடி மட்டுமே இருப்பவர்.. இந்த விஷயம் தெரிந்ததும் பவித்ராவின் நட்பானது, காதலாக மாறியது... விக்னேஷ்வரன் ஆரம்பத்தில் தயங்கி உள்ளார்.. ஆனால் பவித்ரா விடவில்லையே.. "நாம ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொண்டோம்.. இதுக்குமேல வேற என்ன வேணும்? எனக்கு நீங்கள்தான் வேணும்' என்று சொல்லி தன் காதலை இன்னும் ஆழமாக வெளிப்படுத்தினார் பவித்ரா.
இதயம்
பவித்ரா இவ்வளவு சொன்ன பிறகுதான் விக்னேஷ்வரன் மனம் ஆறியது.. இனி தனக்கு எல்லாமே பவித்ரா என்று முடிவெடுத்தார் விக்னேஷ்! இப்படி ஒரு அற்புதமான இதயத்தை அதிகமாக நேசிக்கவும் ஆரம்பித்தார்.. இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.. இரு வீட்டிலும் தெரியப்படுத்தினர்.. விக்னேஷ்வரனை பவித்ரா வீட்டில் பார்த்தனர்.. அவரை பார்த்ததுமே அதிர்ச்சி ஆனார்கள்.. கத்தி கூப்பாடு போட்டு ரகளையே செய்துவிட்டனர்.
உறுதி
"உனக்கு கொஞ்சம்கூட பொருத்தம் இல்லை.. இந்த காதலை ஏற்க முடியாது.. விக்னேஷ்வரனை மறந்துவிடு" என்று தொடர்ந்து வற்புறுத்தினர். அதேபோல, விக்னேஷ்வரன் வீட்டில் கல்யாணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலர்கள் இருவருமே தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.. பிறகு வீட்டை விட்டு வெளியேறினார் பவித்ரா.கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள் மற்றும் விக்னேஷ்வரனின் உறவுகளின் ஆசீர்வாதத்துடன் கல்யாணம் செய்து கொண்டார்.
கறார்
அப்படியே கல்யாணம் முடித்த கையோடு, கரூர் மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்துவிட்டது இந்த புதுமண ஜோடி. இரு வீட்டு பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.. ஆனால் பவித்ரா வீட்டில் ரொம்ப கறாராக இருந்தனர். "அவள் எங்களுக்கு மகளே இல்லை. இப்படிப்பட்ட மகளே எங்களுக்கு வேண்டாம்" என்று சொல்லி கிளம்பி சென்றுவிட்டனர். ஆனால் விக்னேஷ்வரன் குடும்பத்தினர் பவித்ராவை ஏற்றுக் கொண்டனர்.. இதையடுத்து அவர்களுடன் புறப்பட்டு சென்றார் பவித்ரா.