கருவில் இருந்த சிசுவுக்கு முதுகெலும்பு ஆபரேஷன்.. லண்டன் மருத்துவர்கள் புதிய சாதனை
கருவில் உள்ள குழந்தைக்கு முதுகெலும்பு ஆபரேஷன் செய்து லண்டன் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
லண்டன்: கருவில் உள்ள சிசுவுக்கு முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை செய்து லண்டன் மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேற்கு சாசெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஷெர்ரி ஷார்ப் (29). கர்ப்பிணியான இவர் 20 வாரங்களில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் கருவில் இருந்த குழந்தையின் முதுகெலும்பு சீராக இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் அக்குழந்தையால் நடக்க இயலாமல் போகும் அபாயம் இருந்தது.
அதோடு இந்தப் பிரச்சினையால் அக்குழந்தை எதிர்காலத்தில் முடக்குவாதம், கால்களில் உணர்வு இழப்பு, சிறுநீர்ப்பை மற்றும் குடல் நோய் பிரச்சினைகள் என பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
டெல்லியில் அதிகரிக்கும் கேங் வார் - மெட்ரோ ரயில் நிலையம் அருகே துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ஷெர்ரியிடம் அவர்கள் பேசியுள்ளனர். அப்போது கருவிலேயே குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்தால் இதனை சரி செய்து விடலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் நலன் கருதி, இந்த சிக்கலான அறுவைச் சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் ஷெர்ரி.
இதையடுத்து 27 வாரங்கள் ஆன நிலையில், கருவில் இருந்த அக்குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவர்களின் திறமையால் அந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
இந்த அறுவைச் சிகிச்சை முடிந்து 6 வாரங்களுக்குப் பின் ஷெர்ரிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்தக் குழந்தை லண்டனில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பகுதியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறது.
இங்கிலாந்தில் இது போன்று கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.