சொந்த நிலத்தை விற்று ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கும் சகோதர்கள்... கோலாரில் நெகிழ்ச்சிகர நிகழ்வு
கோலார்: கர்நாடக மாநிலம் கோலாரில் சொந்த நிலத்தை விற்பனை செய்து அந்த தொகையை கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர் சகோதர்கள் இருவர்.
கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்த தஜம்மில் பாஷா, முஜம்மில் பாஷா ஆகிய இரண்டு சகோதர்களும் வாழை விவசாயமும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் தவிப்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என இந்த சகோதர்கள் எண்ணியுள்ளனர். தாங்கள் செய்யும் உதவி உண்மையிலேயே ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பினர்.
இதற்காக தங்களுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை ரூ.25 லட்சத்திற்கு விற்பனை செய்து, அந்த தொகை முழுவதையும் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் இந்த மனிதநேய செயலை பார்த்து கோலார் உள்ளூர் நிர்வாகம் தஜம்மில் பாஷா, முஜம்மில் பாஷா சகோதர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.
கேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டும் கொரோனா - மருத்துவமனையில் 27 பேருக்கு சிகிச்சை
10 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, மைதா 1 கிலோ, சமையல் எண்ணெய், மசாலா பொடிகள், டீத்தூள், உள்ளிட்ட சமயலறைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இவர்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் தொகுப்பு பையில் இடம்பெற்றுள்ளன. மேலும், கோலார் பகுதி மக்களுக்கு சானிடைஸர், முகக்கவசம், கையுறை, உள்ளிட்ட நோய் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கிவருகின்றனர். இது வரை 12,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளனர்.
நிவாரணப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஆதரவற்றோர் மற்றும் இரவல் பெறுவோருக்காக மூன்று வேளையும் கடந்த ஒரு மாதமாக உணவு வழங்கி வருகின்றனர். இதற்காக சென்ட்ரல் கிச்சன் தயார் செய்யப்பட்டு அங்கு உணவு சமைத்து எடுத்துச்செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தஜம்மில் பாஷா, சிறுவயதிலேயே தனது பெற்றோர் இறந்துவிட்டதாகவும், தாய்வழி பாட்டி தான் தங்களை வளர்த்து ஆளாக்கியதாகவும் கூறியுள்ளார். பெற்றோர் இறந்ததால் சிக்பலப்பூரில் இருந்து கோலாரில் உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுவயதில் வந்ததாகவும் கூறியுள்ளார். வறுமையான சூழலில் தான் தாங்கள் வளர்ந்ததாகவும், இதனால் ஏழை எளியோரின் துயரத்தை உணர்வுப்பூர்வமாக தங்களால் உணர முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த இக்கட்டான பேரிடரில் சாதி, மதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நிலத்தை விற்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். இதனிடையே இந்த சகோதர்களுக்கு கோலார் பகுதி மக்கள் வாழ்த்துமழை பொழிகின்றனர்.