Exclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டுநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியாராணி வெற்றி பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் அது பற்றி ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: 21 வயதில் ஊருக்கு தலைவராகி விட்டீர்கள், இதை எப்படி உணர்கிறீர்கள்?
பதில்: நான் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என கனவில் கூட நினைத்ததில்லை. எனது ஊர் மக்கள் சேர்ந்து கேட்டுக்கொண்டதால் தேர்தலில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தேன். என் மீதுள்ள நம்பிக்கை காரணமாக நானே எதிர்பார்க்காத வகையில் கிராமமக்கள் எனக்கு அதிக வாக்குகளை செலுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர்.
கேள்வி : உங்கள் கிராம மேம்பாட்டுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்ன திட்டங்கள் கையில் உள்ளன?
பதில்: சூளகிரி ஒன்றியத்தில் உள்ள காட்டுநாயக்கன் தொட்டி கிராமத்தில் சுமார் 2500 பேர் வசிக்கின்றனர். அடிப்படைத் தேவைகளாக கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுப்பது, தெரு விளக்குகளை பொருத்துவது,பழுதடைந்த சாலைகளை சீரமைத்து கொடுப்பது என்பன உள்ளிட்ட சில திட்டங்கள் கைவசம் உள்ளன. முதலில் இவைகளை செய்துகொடுத்துவிட்டு அடுத்தக்கட்டமாக மற்ற தேவைகளை பற்றி திட்டமிடுவேன்.
கேள்வி: நீங்கள் சொல்வதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால், போட்டி அரசியலில் இன்னும் பல கரடுமுரடான அனுபவங்களை சந்திக்க நேரிடும், அதற்கெல்லாம் பக்குவப்பட்டு விட்டீர்களா?
பதில்: நான் தனி மனுஷி இல்லை, ஒரு பஞ்சாயத்திற்கே தலைவர். மேலும், என்னுடன் எனது குடும்பத்தினரும், ஊர் மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை. நிச்சயம் எதையும் எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை என் மனதில் உள்ளது.
கேள்வி: நீங்க இன்னும் கல்லூரி படிப்பையே முடிக்கவில்லை, அதனால் இந்தப் பதவி உங்கள் படிப்பை பாதிக்காதா?
பதில்: நிச்சயம் பாதிக்காது. நான் கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ.மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இன்னும் 3 மாதங்களில் படிப்பு முடிவடைகிறது. இருப்பினும் இந்த மூன்று மாதங்களுக்கும் நான் தங்குதடையின்றி மக்கள் பணியாற்ற எனக்கு கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு நல்குவதாக கூறியுள்ளது. ஊராட்சி மன்றக்கூட்டம், ஆட்சியருடன் சந்திப்பு என எந்த நிகழ்வாக இருந்தாலும் நான் தவறாமல் இருப்பேன்.
உள்ளாட்சித் தேர்தல்.. மீண்டும் வரலாறு படைத்த திமுக.. ஆளுங்கட்சியை வீழ்த்துவது 2வது முறை!
கேள்வி: அரசியல் கட்சியில் இணையும் திட்டம் உள்ளதா?
பதில்: எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போது இல்லை. முழுக்க முழுக்க எனது பஞ்சாயத்து நிர்வாகத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் என நினைக்கிறேன்.