நீங்க ஆபாச படம் பார்த்திருக்கீங்க.. ‘பின்னால் கேட்ட சத்தம்’- ‘சைபர் கிரைம்’ என பணம் பறித்த கும்பல்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிறார் ஆபாச படங்களைப் பார்த்ததாக, நகைக்கடை ஊழியரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் உடனே 10 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
நகைக்கடை ஊழியரும் பயந்துபோய் பணத்தை அனுப்பி விட்டு, மீண்டும் தொடர்பு கொண்டபோது போன் எடுக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், யூ டியூபில் வாக்கி டாக்கி சத்தத்தை ஒலிக்கவிட்டபடி பேசி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
புத்தகங்களில் பாடமெடுத்த தலைமையாசிரியை! இறப்புக்குப் பின் புத்தகமாகவே ஆனார்! கிருஷ்ணகிரி நெகிழ்ச்சி!
மர்ம போன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகையை சேர்ந்தவர் சந்திரகுமார் (33). ஓசூரில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வரும் சந்திரகுமாரை கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், சென்னை சைபர் கிரைம் காவல் அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார். சந்திரகுமார் சிறார் ஆபாசப் படங்களை பார்த்து வருவதாகக் கூறி, வழக்கில் இருந்து தப்பிக்க 10 ஆயிரம் ரூபாயை அனுப்புமாறு கேட்டுள்ளார்.
கம்ப்ளெய்ண்ட் வந்திருக்கு
நீங்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை சமீப நாட்களாக பார்த்து வருவது குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும் என போனில் பேசிய நபர் சந்திரகுமாரை மிரட்டியுள்ளார்.
போன் பே
அவர் பேசுவதை, சைபர் கிரைம் அதிகாரி பேசுவதாக நம்பிய சந்திரகுமார், போன் பே மூலம் அவரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். பின்னர், அந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், சந்தேகமடைந்த சந்திரகுமார், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
பணம் பறிப்பு
அந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் மர்ம நபர்கள் பேசிய மொபைல் எண்ணின் முகவரி போலி என்பதும், பாலக்கோடு அருகில் 'சிம்கார்டு' விற்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த நிலையில் பணம் எடுத்த வங்கி விவரத்தை போலீசார் விசாரணை செய்தபோது பணம் பெற்றவர் சேலம் மாவட்டம், கரடூர் பகுதியை சேர்ந்த மணிமுத்து என்பதும், அவரும் அவரது நண்பர்கள் மூவரும் இணைந்து பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.
யூடியூபில் வாக்கி டாக்கி சத்தம்
போலீசார் விசாரணையில் யூ டியூபில் போலீஸ் 'வாக்கி டாக்கி' சத்தத்தை வைத்துவிட்டு அதன் பின்னர் மொபைலில் பேசி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. மேலும் இதுபோல பலரிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரிந்துள்ளது. இதையடுத்து சந்திரகுமாரிடம் சைபர் கிரைம் போலீசார் போல் மிரட்டி பணம் பறித்த தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மால்வின், 22, மணிமுத்து, 23, கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பர்த்தி பகுதியை சேர்ந்த வேடியப்பன் 28 மற்றும் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் 38, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்னும் எத்தனை பேரிடம்
மேலும் அவர்களிடமிருந்து 3 மொபைல் போன்கள், வங்கி பாஸ் புக், டெபிட் கார்டுகள், 4 சிம் கார்டுகள் மற்றும், 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த நான்கு பேரும் இதுபோல் எத்தனை பேரிடம் மிரட்டி பணம் பெற்றார்கள் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் அருகே சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி வாலிபரிடம் பணம் பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது