மூதாட்டியை கொன்ற காட்டு யானை கூட்டம்.. 15 மணி போராடி வனத்துக்குள் விரட்டியடிப்பு!
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மூதாட்டியை கொன்ற 60 காட்டு யானைகள் கூட்டத்தை, வனத்துறை ஊழியர்கள் 15 நேரம் போராட்டத்திற்கு பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 60 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்துள்ளன.
இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பீர்ஜேப்பள்ளி, சானமாவு கோபசந்திரம், ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படப்பட்டிருந்த ராகி, சோளம், அவரை, துவரை போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.
யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி, காலைக்கடனுக்காக சென்ற குடிசாதனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடலட்சுமி அம்மாள் என்ற மூதாட்டியை, காட்டு யானை கூட்டத்தில் இருந்த ஒரு யானை மிதித்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் விவசாய நிலங்களையும், பொதுமக்களையும் தாக்கி வரும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டிவிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சாணமாவு வனப்பகுதியில் இருந்த 60 யானைகளை பென்னிகள், அனுமத்தபுரம், சிரிகிரிப்பள்ளி, அனுசோனை வழியாக வனப்பகுதிக்குள் விரட்ட முடிவு செய்த 20 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள், சுமார் 15 மணிநேரம் போராடி, பட்டாசுகளை வெடித்து தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
முள் படுக்கையில் தவம்.. குறி சொல்லி அசத்தல்.. பரபரக்கும் பெண் சாமியார்.. சிவகங்கையில் சலசலப்பு
யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதால் கிராமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் ஓசூர் பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.