பெருமாளுக்கே "டிக் டாக்"கா.. சிலையை கிண்டலடித்த 7 பேரை பிடித்து உள்ளே போட்ட போலீஸ்!
டிக்டாக் ஆப்பில் பெருமாள் சிலையை கிண்டல் செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
கிருஷ்ணகிரி: கர்நாடகா செல்லும் கோதண்டராமர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. எங்கெல்லாம் தடங்கல்கள், இடைஞ்சல்கள் வருகிறதோ அங்கெல்லாம் சிலை நிறுத்தப்பட்டு, இடையூறுகள் சரி செய்யப்படுகின்றன.
குவியும் பக்தர்கள்
வழியில் குறுக்கே வரும் பாலங்கள், கட்டிடங்கள், கடைகள், வீடுகள், ரவுண்டானா என இடித்து தள்ளிவிட்டு, பெருமாள் சிலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்கிறது. இடையூறுகள் வரும் இடங்களில் எல்லாம் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்படுகிறது. அப்போது, பெருமாளை பார்க்க பக்தர்கள் குவிகின்றனர்.
பக்தி பரவசம்
பூஜைகளை செய்தும், காணிக்கைகளை செலுத்தியும், செல்பிகளை எடுத்தும் மகிழ்கின்றனர். பிறகு சாலைகள் சீர்செய்யப்பட்டபிறகு, பெருமாளை அந்த பகுதி பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழி அனுப்பி வைத்து வருகின்றனர். இப்போது பெருமாள் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நகர்ந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
டிக்-டாக்
இந்நிலையில், பெருமாள் சிலையை இளைஞர்கள் சிலர் கேலி செய்துள்ளனர். இந்தசிலைக்கு அந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து டிக்-டாக் ஆப்பில் கருத்து தெரிவித்து, அதனை வீடியோக்களாகவும் வெளியிட்டுள்ளனர். பெருமாளை கிண்டல் செய்து வீடியோ வெளியிடுவதா என பல்வேறு தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக இறங்கினர்.
7 பேர் கைது
அதன்படி சூளகிரியை சேர்ந்த மகேஷ் குமார், சத்யமூர்த்தி, சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர். கலவரத்தை தூண்டும் விதமாக இந்த வீடியோக்களை வெளியிட்டதாக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமர்சனம்
அந்த வீடியோவில் பெருமாளுடன் கர்நாடகாவையும் சேர்த்து இளைஞர்கள் விமர்சித்து கருத்து பதிவு செய்ததாக இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அது மட்டுமில்லை, சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களையும் இந்த இளைஞர்கள் மிக மோசமாக விமர்சித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
3 பிரிவுகள்
பெருமாள் சிலை, கர்நாடகம், சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக, பிரச்சனையை தூண்டும் விதமாக கருத்து பதிவிட்ட இந்த 7 பேரையும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் வேதனை
டிக்-டாக் ஆப்பில் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமாக இளைஞர்கள் பொழுதை கழிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்தால், இது போன்ற விபரீதங்களிலும் ஈடுபட்டு வருகிறார்களே என பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.