எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்.. ஏற்க முடியாத கட்சிகள் வெளியே போங்க.. தெறிக்கவிட்ட கே.பி.முனுசாமி
கிருஷ்ணகிரி: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மட்டும் அதிமுக கூட்டணியில் இருக்க முடியும் என்று அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
பாஜகவில் சில தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது பற்றி அதிருப்தி தெரிவித்த நிலையில் முனுசாமி இவ்வாறு ஒரு பேட்டி அளித்துள்ளார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
முதல்வர் பழனிச்சாமியின் வீட்டிற்கு போய் வாழ்த்திய பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில், கடந்த 7ம் தேதி இதுகுறித்து அறிவிப்பு வெளியானது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து பன்னீர்செல்வத்தை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக கோஷம் ஆரம்பம்
மேலும், சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார கோஷங்களை, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன் வைக்க ஆரம்பித்து விட்டது. மண்ணின் மகனா, மன்னரின் மகனா, என்பது போல திமுகவை நேரடியாக சீண்டும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன் அதிமுகவின் ஐடி விங்க் பிரச்சார கோஷங்களை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டது.
பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்த நிலையில்தான், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான பொன் ராதாகிருஷ்ணன் அளித்த ஒரு பேட்டியில், அதிமுக அதன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது.. அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற தொனியில் பேசி இருந்தார். மேலும் சில பாஜக தலைவர்களும் இதே மாதிரி பேசிய நிலையில், நேற்று திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது எங்கள் கட்சி, உங்களை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறது. சில தலைவர்கள் கூறுவதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று முருகன் சமாதானம் கூறியதாக தெரிகிறது.
தேசிய கட்சியோ, மாநில கட்சியோ வெளியேறலாம்
இந்த நிலையில்தான் கிருஷ்ணகிரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாத கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்க முடியாது. அதிமுகவில் இரட்டை தலைமை இருப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இதில் சசிகலா நுழைய வாய்ப்பு கிடையாது. அதிமுக வழிகாட்டு குழுவில் இடம் பெற்றுள்ள எம்எல்ஏ மாணிக்கம் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். எனவே வழிகாட்டு குழுவில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்ற விமர்சனம் தேவையற்றது. தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சி எதுவாக இருந்தாலும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள் மட்டும்தான் கூட்டணியில் இருக்க முடியும். இவ்வாறு முனுசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
வலிமையான மெசேஜ்
இதன்மூலம் பாஜக தலைவர்களின் பேச்சுக்கு முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி விஷயத்தில் எந்த ஒரு மாற்றமும் அதிமுக செய்யாது என்பதை திட்டவட்டமாக முனுசாமியின் பேட்டி உணர்த்தி விட்டது. எனவே, இனிமேலும் முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.