60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60). மது பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் மதுபோதையில் சாலை செல்லும் பேருந்துகளை வழிமறித்து கலாட்டா செய்வது வழக்கம்.
இந்நிலையில் அவர் அரசம்பட்டியில் உள்ள மதுபானக்கடையில் மது அறுந்துவிட்டு மது போதையில் மதுபானக்கடைக்கு எதிரே உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறியுள்ளார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள், அவரை கீழே வரும்படி கூறியுள்ளனர். மேலும் இளைஞர்கள் சிலர், டவர் மீது ஏறி சேகரை காப்பாற்ற முயற்சித்தபோது, மேலே ஏறி வந்தால் கீழே குதித்துவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் இளைஞர்கள் டவர் மீது ஏறாமல், பாரூர் காவல் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன் நிகழ்விடத்திற்கு வந்து, முதியவரை சமாதானப்படுத்தி பேசியவாறு டவர் மீது ஏறியுள்ளார். அப்போது முதியவர் மீண்டும் உயரே ஏறியவாறு இருந்ததோடு மட்டுமில்லாமல், போலீஸ் மேலே வந்தால் கீழே குதித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
பாதி தூரம் வரை சென்ற காவல் ஆய்வாளர் கபிலன் மீண்டும் திரும்பிவிட்டார். இதற்குள்ளாக டவர் மீது ஏறிய சம்பவம் அருகே உள்ள கிராமம் முழுவதும் பரவியதையடுத்து அங்கு கூட்டம் அதிகமாக கூடியது.
ஒருகட்டத்தில் டவரின் உச்சி பகுதிக்கு சென்ற சேகர், தனது பாக்கெட்டில் வைத்திருந்த குவாட்டர் பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு, பின்னர் தான் கட்டியிருந்த வேட்டியை கழட்டி பொது மக்கள் மீது வீசியுள்ளார்.
இதனால் என்ன செய்வது என யோசித்த காவல் துறையினர், சேகரின் நண்பர் ஒருவரை வைத்து மேலே ஏறச்சொல்லியுள்ளனர். அவரையும் டவர் மீது ஏறக்கூடாது என மிரட்டியுள்ளார். உடனே அவருடைய நண்பர், உன்னை காப்பாற்ற வரவில்லை எனவும், உனக்கு மீண்டும் மது பாட்டில் வாங்கி வைத்திருப்பதாக கூறி மது பாட்டிலை காட்டியவாறு மேலே ஏறியுள்ளார்.
அதற்கு சம்மதித்து அவரை மேலே வரவழைத்துள்ளார் சேகர். அவரிடன் சென்ற நண்பர் அவரிடம் மது பாட்டிலை கொடுத்துவிட்டு அவரை அங்கேயே இருக்கமாக கட்டி பிடித்துக்கொண்டார். இதனையடுத்து டவர் மீது வேகமாக ஏறிய தீயணைப்பு வீரர்கள் அவரை பிடித்து கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி ஒரு தீயணைப்பு வீரரின் தோள் மீது அமர வைத்து பத்திரமாக மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் போக்கு காட்டிய போதை ஆசாமியால் அரசம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. சேகர் மீது பாரூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.