எருது விடும் விழா தடை.. அண்ணாமலை கோபம்.. தமிழர்கள் கலாசாரங்களை தடுப்பதாக கொந்தளிப்பு
போராட்டம் நடத்தித்தான் காலாகாலமாக நடந்து வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளவேண்டாம் என அண்னாமலை கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி : திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல, தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாகத் தடை செய்வதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. ஓசூர் அருகே கோபசத்திரம் பகுதியில் இன்று எருதுவிடும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததையடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
பாஜகவில் பாதயாத்திரை குஸ்தி? இங்கிட்டு வானதி சீனிவாசன்..அங்கிட்டு அண்ணாமலை ஆதரவாளர் கிளம்புகிறார்!
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதனிடையே ஓசூர் அருகே கோபசத்திரம் பகுதியில் சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.
போராட்டம்
அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் திரண்டு சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர். அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறி நின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
அனுமதி அளித்த கலெக்டர்
போராட்டத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். எனினும், போராட்டத்தைக் கைவிடாமல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். ஏராளமான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் மீண்டும் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
கண்ணாமூச்சி
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருது விடும் விழாவிற்கு, பொங்கல் தினம் தொடங்கி, பல வாரங்களாக அனுமதி கேட்டும், அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு. அனுமதி கொடுப்பதும், மறுபடியும் தடை செய்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பதால் ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலாச்சார விழாக்களுக்கு தடை?
இதையடுத்து தற்போது, மீண்டும் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல, தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாகத் தடை செய்வதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வரும் முன், எருது விடும் விழா தடை செய்யப்படாது என்று கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் தடை விதிக்க முற்படுகின்றனர்.
அரசை எச்சரிக்கிறேன்
போராட்டம் நடத்தித்தான் காலாகாலமாக நடந்து வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்குப் பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்றும், எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை எச்சரிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.