மாடுகள் விற்பனை மூலம் மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் பி.இ.பட்டதாரி...!
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பி.இ.(சிவில் இஞ்சினியரிங்) முடித்த இளைஞர் ஒருவர் மாடுகளை விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் சென்னையில் உள்ள வேலம்மாள் கல்லூரியில் பி.இ.(சிவில் இஞ்சினியரிங்) கடந்த 2015-ல் முடித்துள்ளார். படிப்பு முடிந்த கையோடு வழக்கம்போல் எல்லோரையும் போல் வேலை தேடியிருக்கிறார்.
ஆனால், ஐந்தாயிரம், பத்தாயிரம், மட்டுமே ஊதியம் கொடுக்க முடியும் என கட்டுமான நிறுவனங்கள் கூறியதால் வெறுத்துப்போய் சொந்தக்கிராமத்திற்கே சென்றுவிட்டார் பரந்தாமன்.
கோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு
மாடு விற்பனை
பரந்தாமனின் தந்தை லட்சுமணன் சின்ன முத்தூர் கிராம நாட்டாமையாக இருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக மாடுகளை விற்பனை செய்வது தான் அவருக்கு தொழிலாகும். இந்நிலையில் பரந்தாமனும் தந்தையை போல் மாடுகளை வாங்கி விற்கலாம் என முடிவெடுத்த அவர், சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு சென்று ஹெச்.எஃப், ஜெர்ஸி, நாட்டுமாடு உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த கன்றுகுட்டிகளை விவசாயிகளுக்கு வளர்க்க கொடுத்துள்ளார். ஓரளவு வளர்ந்ததும் விவசாயிகளுக்கு வளர்ப்புக்கான தொகையை கொடுத்துவிட்டு அதனை பிடித்து வந்து நல்ல தொகைக்கு விற்றுவிடுகிறார் பரந்தாமன்.
நல்ல லாபம்
இது தொடர்பாக நாம் அவரிடம் பேசிய போது, மாதம் 20 முதல் 30 மாடுகள் வரை விற்பதாகவும், மாட்டை பொறுத்து லாபம் வைத்து விற்பதாகவும் தெரிவிக்கிறார். மேலும், ஒரு மாடுக்கு ரூ.1000 முதல் ரூ.3000 வரை லாபம் வைத்து விற்பனை செய்வதாகவும், இதன் மூலம் மாதம் ரூ.75,000 முதல் ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடிவதாகவும் கூறுகிறார்.
மகிழ்ச்சி
தனது தந்தையிடம் இருந்து மாடு விற்கும் தொழிலை கற்றுக்கொண்டதாகவும், மேலும், தங்கள் நிலத்தில் கத்திரிகாய் சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். அரசு வேலை கிடைந்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பேனா எனத் தெரியாது, ஆனால் மாடு விற்பனை செய்வது மன நிறைவை தருவதாக கூறுகிறார் பரந்தாமன்.
பண்ணையாளர்கள்
மாட்டுப் பண்ணை தொடங்க இருப்பதாக பலரும், தன்னை தொடர்பு கொண்டு எந்த மாடுகளை வாங்கலாம், எது நல்லது என பல சந்தேகங்களை கேட்பதாகவும், அதற்கு பதிலளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தேவையான ரகத்தை தேர்வு செய்து கொடுப்பதாக பெருமிதப்படுகிறார் பரந்தாமன். தற்போது கேரளாவின் மில்மா கூட்டுறவு சொசைட்டி உறுப்பினர்களுக்கு தாம் தான் ஜெர்ஸி, ஹெச்.எஃப், உள்ளிட்ட ரக மாடுகளை அனுப்ப உள்ளதாக கூறினார்.