9வது நாளாக ஒசூரில் இலவச காய்கறி வினியோகம்.. அசத்தும் அதிமுக
கிருஷ்ணகிரி: ஒசூர், மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் 9வது நாளாக டன் கணக்கில் காய்கறிகளை இலவசமாக அதிமுகவினர் வழங்கினர்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி என்பது கர்நாடக - தமிழக மாநில எல்லை பகுதியாக இருந்து வருகிறது. ஒசூர் மாநகரில் இரண்டு தொழிற்பேட்டைகளில் பணிபுரியக்கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர்களும் தினக்கூலிகளும் அதிகமாக வசித்து வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வருவாயின்றி அனைவரும் வீடுகளில் உள்ளநிலையில், அத்தியாவசிய காய்கறிகளை பெற சந்தைப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகஅளவில் குவிவதை குறைக்கும் வகையிலும், ஏழை எளியோர் இலவசமான காய்கறிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் வார்டுகள் தோறும் அதிமுகவினர் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
அரசின் வழிமுறையோடு, இதுவரை ஒசூர் மாநகரில் 45000 குடும்பங்களுக்கு 340 டன் காய்கறிகளை மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டுள்ளது. 9வது நாளாக இன்றும் ஒசூர் மாநகராட்சியில் தேர்ப்பேட்டை, பார்வதி நகர், அன்னைநகர், ஆதவன் நகர் ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வெங்காயம், தக்காளி, கேரட், முள்ளங்கி, கத்திரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட 10 வகை காய்கறிகளின் தொகுப்பை வழங்கினார். இதனை ஏழை எளியோர் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்.