பெங்களூருவில் இருந்து புறப்பட்ட காரைக்கால் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டது
கிருஷ்ணகிரி: பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே இன்று காலை திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தினசரி பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலை த்தான் பெங்களூருவில் இருந்து ஓசூர் செல்லும் ஏராளமான மக்கள் நம்பி இருக்கிறார்கள். இந்த ரயில் காலை 7.17க்கு கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு இரவு 10.40க்கு சென்றடையும்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் புறப்பட்ட ரயில் காலை 9.45 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காடுசெட்டிபட்டி அருகே சென்ற போது திடீரென தடம் புரண்டது.
ரயில்வே ஊழியர்கள்
இந்த விபத்தில் பயணிகளுக்கோ ரயிலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.தண்டவாளத்தைவிட்டு தரையில் இறங்கிய ரயிலின் என்ஜின் சக்கரங்களை பழையபடி தண்டவாளத்தில் ஏற்றி சீரமைக்கும் பணியினை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டனர்.
ரயில்சேவை பாதிப்பு
ரயில் தடம் புரண்ட காரணத்தால், சேலம் மற்றும் பெங்களூரு இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் செல்லும் பயணிகளுக்கு ஓசூரில் இருந்து செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக பெங்களூரு டிவிஷனல் ரயில்வே மேலாளர் அசோக் குமார் வர்மா தெரிவித்தார்.
என்ஜின் மட்டுமே
ரயில் என்ஜினின் முன்பகுதி சக்கரம் மட்டும் தரையிறங்கியது என்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அசோக் குமார் கூறினார்.
லோக்மான்யாதிலாக்
கோவையில் இருந்து பெங்களூரு வழியாக மும்பை செல்லும் லோக்மான்யாதிலாக் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 11014) சேலம், திருப்பத்தூர், பங்காருபேட், கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டிரயில் நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டது. இந்த ரயில் விபத்து தொடர்பாக உயர் ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.