திமுக நடிகருக்கு வலை வரிக்கும் பாஜக! உட்கட்சித் தேர்தல் அதிருப்தி! கிறுகிறுக்க வைக்கும் கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: திமுக உட்கட்சித் தேர்தலில் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் உள்ள ஒசூர் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், நடிகருமான மாதேஷ்வரனை பாஜகவிற்கு இழுக்க அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர்.
மாதேஷ்வரன் பிறந்தநாளின் போது அழையா விருந்தாளியாக அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்துக் கூறிய பாஜக நிர்வாகி ஒருவர், சில பல ஆஃபர்களையும் அள்ளிக் கொடுத்துவிட்டு திரும்பியிருக்கிறார்.
நடிகர் மாதேஷ்வரனை பொறுத்தவரை எம்.எல்.ஏ. சீட், மேயர் சீட், தான் கிடைக்கவில்லை கட்சியிலாவது மாவட்ட துணைச் செயலாளரோ அல்லது தலைமை செயற்குழு உறுப்பினரோ கிடைக்கும் என எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.
ஒசூர் மாதேஷ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும், முன்னாள் திமுக நகரச் செயலாளராகவும் இருந்தவர் மாதேஷ்வரன். அருள்நிதியின் நெருங்கிய வட்டத்தில் உள்ள அவர் அவரது திரைப்படங்கள் அனைத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விடுவார். அண்மையில் வெளியான அருள்நிதியின் டைரி திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் மாதேஷ்வரன்.
தொடர் ஏமாற்றம்
கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஒசூர் தொகுதி இடைத்தேர்தலின் போது கட்சியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து கிடைக்காததால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்தார். இவர் தனித்து போட்டியிட்டால் திமுக தோற்பது உறுதி என மேலிடத்துக்கு பறந்த தகவலால் இவரை அழைத்து துரைமுருகன் சமாதானம் பேசி சில உறுதிகளை கொடுத்து அனுப்பிவைத்தார். இதையடுத்து தனித்து போட்டியிடும் முடிவை கைவிட்ட அவர் ஒசூரில் திமுக வேட்பாளருக்காக தேர்தல் பணியாற்றியிருக்கிறார்.
சட்டசபைத் தேர்தல்
இடைத்தேர்தலில் தான் சீட் கிடைக்கவில்லை, சட்டசபைத் தேர்தலிலாவது தனக்கு கட்சி மேலிடம் ஒசூர் தொகுதியை வழங்கும் என மாதேஷ்வரன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,. அதுவும் நடக்கவில்லை. இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், துணை மேயர் பதவிகளில் ஏதேனும் ஒன்று தனக்கு கிடைக்கும் என உள்ளூர் கட்சிக்காரர்களிடம் உதார்விட்டுத் திரிந்திருக்கிறார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதையடுத்து தனக்கிருக்கும் மேலிட லாபிகள் மூலம் உட்கட்சித் தேர்தலிலாவது கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் முக்கியப் பதவியை கைப்பற்ற துடித்தார்.
பாஜக தூது
ஆனால் இவரது அனைத்து முயற்சிகளுக்கும் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தரப்பு செக் வைத்துக் கொண்டே இருந்தது. இதனிடையே ஒரு கட்டத்தில் மாதேஷ்வரன் விரக்தி நிலைக்கு வந்ததை அறிந்த பாஜக நிர்வாகிகள் இவருக்கு நூல் விட்டு பார்த்துள்ளனர். மாதேஷ்வரன் பிறந்தநாளுக்கு வாலண்ட்ரியாகவே அவரது வீடு தேடிச் சென்று வாழ்த்துக் கூறிய பாஜக நிர்வாகி பெரிய ஆஃபர் ஒன்றையும் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மாநில தலைமையே உங்கள் வருகையை எதிர்நோக்குவதாக உருகியிருக்கிறார்.
ஆள் பலம்
பாஜக வழிந்து சென்று மாதேஷ்வரனை மீண்டும் மீண்டும் அழைப்பதன் பின்னணியில் அவரிடம் உள்ள பொருட்பலமும், ஆள் பலமும் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருவதால் வெகுஜன மக்கள் மத்தியில் பிரச்சாரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கணக்கு போடுகிறது கமலாலயம். இதனிடையே இது குறித்த தகவல் பற்றி விளக்கம் அறிய திமுக பிரமுகரும், நடிகருமான மாதேஷ்வரனை நாம் 2 முறை தொடர்பு கொண்டும் நமது அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.