ஓசூர் அருகே கிராமத்தினருடன் மோதல்.. வடமாநிலத் தொழிலாளர்கள் படுகொலை.. 3 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நஞ்சாபுரம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்திக்குத்து காயங்களுடன் 3 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஓசூர் மத்திகிரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நஞ்சாபுரம் கிராமத்தில் பல்வேறு தனியார் தொழில்சாலைகள் செயல்படுகின்றன.. இந்த தொழில்சாலைகளில் வட மாநில இளைஞர்கள் ஏராளமானோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
21 வயது மாணவி பஞ்சாயத்து தலைவர். 2 ரூபாய் கொரோனா மருந்து.. 2020 கிருஷ்ணகிரி டாப் 10 சுவாரஸ்யங்கள்!
மாறி மாறி தாக்குதல்
இந்த நிலையில் நஞ்சாபுரம் கிராம மக்களுக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களுக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கி உள்ளனர்.
3 பேர் படுகாயம்
இதனால் நஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், வடமாநில இளைஞர்களை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர், இந்த தாக்குதலில் பீர்ஜே மற்றும் பீர்ஜேஸ் ஆகிய இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் உடன் இருந்த 3 வடமாநில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
வழக்கு பதிவு
இது குறித்து தகவல் அறிந்து மத்திகிரி போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப் பதிந்து தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
எப்படி தகராறு
இது தொடர்பாக அந்த பகுதியினர் கூறுகையில், கஞ்சா புகைத்து போதையில் இருந்த வடமாநில தொழிலாளர்களுடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த இருவர் பேசியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தான் அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 6 பேரை கத்தியால் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் ஓசூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.