கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நுழைந்தது கொரோனா... 43 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் முதல்முறையாக அந்த வரிசையில் இணைந்துள்ளது கிருஷ்ணகிரி. அலசநத்தத்தை சேர்ந்த 43 வயது நபர் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது.
இந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். மேலும், மேல்பரிசோதனை முடிவுகள் நாளை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஒன்றே ஒன்னு கண்ணே கன்னு என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனா பாதிப்பில் பூஜ்யம் என்ற நிலையில் இருந்தது. ஆனால் இப்போது அங்கும் கொரோனா நுழைந்துவிட்டதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமே இல்லை என்ற புதிய நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் அவர் தொடர்பு சார்ந்தவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான முடிவுகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை எனத் தெரிகிறது.