எங்களுக்குள் சண்டை இல்லை.. நிம்மதியும் இல்லை.. அதனால இப்படி ஒரு முடிவு... ஜெரினாவின் பகீர் கடிதம்
கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்
Recommended Video
கிருஷ்ணகிரி: "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை.. ஆனா நிம்மதியும் இல்லை.. அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டோம்" என்று ஜெரினா கைப்பட எழுதிய கடிதத்தை கண்டு பொதுமக்கள் கலங்கி விட்டனர்.
கிருஷ்ணகிரி செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன். இவர் ஒரு லாரி டிரைவர். ஜெரினா என்பவருடன் கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகிறது. ஆனால் இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை. இப்போதுதான் ஜெரினா 3 மாத கர்ப்பமாக இருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு 2 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்க போனவர்கள் நேற்று காலை வரை எழுந்திருக்கவே இல்லை. இதனால் சந்தேகப்பட்ட அக்கம் பக்கம் வீட்டினர், ஜெரினா வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது, குமரனும், ஜெரினாவும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ந்தனர். உடனே இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று, உடல்களை மீட்டு விசாரணையில் இறங்கியது. அப்போதுதான் ஜெரினா எழுதிய அந்த கடிதம் போலீசார் கண்ணில் சிக்கியது.
அந்த கடிதத்தில், "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. ஆனால் நிறைய கடன் வாங்கிவிட்டோம், எங்களால், அந்த கடனை திருப்பி தர முடியவில்லை. நிம்மதியாக வாழவும் முடியவில்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். சொந்தக்காரர்கள் யாராவது, எங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று, கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. 3 மாத கர்ப்பிணி பெண்ணுடன் லாரி டிரைவரும் தூக்கு போட்டு கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.