ஜோதிநகர் பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு அரிசி பருப்பு கொடுத்த ஆசிரியர்கள்
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கடந்த ஏப்ரல் மாதம் ஜோதிநகர் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரூபாய் 600 மதிப்புள்ள மளிகை மற்றும் சுகாதார பொருட்களை பள்ளி ஆசிரியர்கள் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாட்சியர் பங்கேற்று வழங்கினார். ஜோதிநகர் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வீடுகள் அமைந்துள்ள ஜோதிநகர், நாச்சகவுண்டனூர், காமராஜ் நகர், கெங்கிநாயகன்பட்டி, படதாசம்பட்டி ஆகிய குக்கிராமங்களுக்குச் சென்று நேரில் பொருட்களை வழங்கினர். இப்போது சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பெற்றோர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றன. நம் நாட்டில் பள்ளிக்கூடங்கள் என்பது கல்வி சொல்லித்தரும் இடமாக மட்டும் இருப்பதில்லை. பள்ளிக்கூடங்களின் விடுமுறை நாள் என்பது கல்வி போதிக்கப்படுவது இல்லாத நாள் மட்டுமில்லை. இந்தியாவின் அங்கன்வாடிகளும், அரசு பள்ளிக்கூடங்களும் செயல்படவில்லை என்றால் இங்குக் குழந்தைகளுக்குச் சத்துணவாகக் கிடைக்கும் உணவும் கிடைக்காமல் போகும்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், இந்தியா முழுக்க பள்ளிக்கூடங்களும், அங்கன்வாடிகளும் இயங்காமல் உள்ளதால் நம் நாட்டுக் குழந்தைகள் போதிய உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கும், அவை வளர்ந்த பின் எந்த நோய்களும் அவர்களைத் தாக்காமல் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கும் அவர்களின் தொடக்கக் காலத்தில் அவர்கள் உட்கொள்ளும் உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் ஏழை குழந்தைகளுக்கு அரசு நடத்தும் அங்கன்வாடி மையங்களின் மூலமாகவும், பள்ளிகளின் மூலமாகவும் அரசு சார்பில் சத்துணவு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன? விஜயபாஸ்கர் பேட்டி
அரிசி, முட்டை, பால், பருப்பு என ஒவ்வொரு மாநில அரசும் வழங்கும் உணவு மாறுபட்டாலும் பல லட்ச ஏழை குழந்தைகளுக்கு இவை ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு முக்கியமான அரசுத்திட்டம். லாக்டவுன் காரணமாக இந்த மதிய உணவுத்திட்டம் செயல்படாமல் இருப்பதால், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாவதோடு மட்டுமில்லாமல் அவர்கள் கோவிட் 19 நோய் தாக்கினால் அதிக பாதிப்பு ஏற்படும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான ஏழை மாணவர்கள் இந்த சத்துணவு கிடைக்காமல் அவதிப்பட்டே வருகின்றனர். சாதாரண நாட்களில் தினமும் அரிசி, முட்டை என மதிய உணவு வழங்கப்பட்டு வந்த குழந்தைகள் எல்லாம் கடந்த 3 மாதங்களாக அந்த ஒரு நேர சத்தான உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்ப்பவர்கள். இதில் அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தை நம்பியிருப்பவர்களும் அடக்கம். லாக்டவுன் காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டு பல குடும்பங்களில் வருமானம் மோசமாக பாதிப்படைந்துள்ளது. சாதாரண நாட்களிலேயே இந்த குழந்தைகள் வீடுகளில் தினசரி சத்தான உணவு கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். ஆனால் இப்போது பள்ளியிலிருந்து வரும் சத்துணவும் இல்லை, வருமானமும் இல்லை என்பதால் நிலைமை மிக மோசமாகவே உள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். எனவே குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்குவதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திருமதி ஆனந்தி குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி, உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு ஜி.எம். சிவக்குமார், சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்
ஆன்லைன் வகுப்புகள் அரசு சார்பில் நடைபெறும் இந்த நேரத்தில் அனைவருக்கும் ரேசன்கடைகள் மூலமாகவோ அல்லது ஆசிரியர்கள் மூலமாகவே சத்துணவு சமைக்கும் உணவுப் பொருட்களை மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்க உத்தரவிடலாம். இதன் மூலம் சத்தான உணவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.