பயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி: மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாய பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் விவசாய பயிர்க்கடனை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருந்தன. இதனிடையே சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதற்கான தேவை எழவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சிறு, குறு விவசாயிகளில் பயிர்கடன் பெறுபவர்கள், உரிய காலத்தில் கடனை செலுத்திவிட்டால், 7 சதவீத வட்டியை தமிழக அரசு ஏற்கும் என்று அறிவித்ததையடுத்து தற்போது 86 % கடன் வசூலாகி விடுகிறது. எனவே தமிழகத்தில் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை இல்லை என்றார்.
இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தேர்தல் நேர வாக்குறுதியில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்ததை நினைவு கூர்ந்துள்ளனர்.
இதனை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள், தங்களது பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கூட்டத்திற்கு பின்னர் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ராமகவுண்டர், பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கையை பரவலாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையிலும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நினைவில் வைத்தும் விரைந்து விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் விவசாய கடன்கள் அனைத்தையும் பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர் தென்பெண்ணையாற்றிலே அணைக்கட்ட வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் தடுப்பணைகள் கட்டி, அனைத்து ஏரிகளுக்கும் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.
மத்திய அரசு அறிவித்திருக்கும் கோதாவரி -காவிரி இணைப்பு திட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் காய்ந்து போன மா தென்னை போன்ற மரங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக, ஜூலை 5ம் தேதி உழவர் தின பேரணி மற்றும் மாநாடு நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.