அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிச்சிட்டோம்.. ‘துரோகி, எதிரி’ - 2 பேரை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
கிருஷ்ணகிரி : சில விஷமிகள், துரோகிகள் கட்சிக்குள் ஊடுருவினர், அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடித்து விட்டோம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
எதிரியோடு, துரோகிகளும் கை கோர்த்து அவர்கள் செய்த சதியால்தான் இன்று தி.மு.க ஆட்சி நடக்கிறது. தற்போது விழித்துக் கொண்டோம் என எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் பேசியுள்ளார்.
அ.தி.மு.க தலைமை அலுவலகம் ஒன்றரை கோடி தொண்டர்களின் கோவில், அதை உடைத்து கணினிகள், ஆவணங்கள், சொத்து பத்திரங்களை திருடி சென்றவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா? என ஓபிஎஸ்ஸை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
வரிசையாக எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த அதிமுக நிர்வாகிகள்.. 'திரும்பும் கலாச்சாரம்?’ - சலசலப்பு!
ஈபிஎஸ் பயணம்
அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். நேற்று சேலத்தில் இருந்து சென்னைக்குப் பயணித்த எடப்பாடி பழனிசாமிக்கு, கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை
அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் கட்சியின் ஆணிவேரான தொண்டர்களைச் சந்திக்க வந்துள்ளேன். எத்தனையோ முறை கிருஷ்ணகிரி வந்தாலும் தற்போது உங்களை பார்ப்பது உணர்வுப்பூர்வமாக உள்ளது. தி.மு.க வாரிசு அரசியலை நடத்தி வருகிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதாரங்களை எடுத்து வருகிறார். ஆனால் அ.தி.மு.கவை தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை.
கறுப்பு ஆட்டை கண்டுபிடித்துவிட்டோம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கரடுமுரடான பாதைகளை கடந்து வந்து பல சாதனைகளை செய்துள்ளனர். சில விஷமிகள், துரோகிகள் கட்சிக்குள் இருந்து தேர்தல் வெற்றியைத் தடுத்தனர். அந்த கறுப்பு ஆட்டை கண்டுபிடித்து விட்டோம். எதிரியோடு, துரோகிகளும் கை கோர்த்து அவர்கள் செய்த சதியால் தான் இன்று தி.மு.க ஆட்சி நடக்கிறது. தற்போது விழித்துக் கொண்டோம். யார் துரோகிகள் என்பதை தொண்டர்கள் உணர்ந்துவிட்டதால் அ.தி.மு.கவை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அதில் அ.தி.மு.க தான் வெற்றி பெறும்.
வீட்டு மக்கள் பற்றித்தான் கவலை
திமுக ஆட்சி பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியும் எந்த மக்களுக்கு நன்மையும் நடக்கவில்லை. 20 ஆயிரம் கோடி பணத்தைச் சுருட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் பாதித்துள்ள நிலையில் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு அறிவிப்பால் மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றி வைத்துள்ளனர். திமுகவினருக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை. அவர்களது வீட்டு மக்கள் பற்றிய கவலைதான். ஊழல் செய்து யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவரை சிறந்த அமைச்சர் என புகழ்பாடுகிறார்கள்.
நாங்கள் சீண்டவில்லை
குடும்ப ஆட்சியால் தப்பித்தோம் பிழைத்தோம் என இலங்கையில் அதிபரே ஊரை விட்டு ஓடிவிட்டார். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்பட்டால் எந்த தலைவருக்கும் பாதுகாப்பில்லை. தமிழகத்தில் அதுபோன்ற நிலை வரக் கூடாது என எச்சரிக்கிறேன். அ.தி.மு.க நிர்வாகிகள் மீதும் அவர்கள் செய்த தொழில்களை முடக்கும் வகையிலும் வழக்கு போடுகிறீர்கள். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுடைய நிலைமை என்ன என்று யோசித்துக் கொள்ளுங்கள். நாங்கள் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் யாரையும் சீண்டவில்லை. நாடும் செழிப்போடு இருந்தது. தொழில் வேறு, அரசியல் வேறு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அவர் கட்சி தலைவராக முடியுமா?
அ.தி.மு.கவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையின் கேட்டை உடைத்து, ஜெயலிதாவின் அறைக்குச் சென்று அங்கிருந்த கணினிகளை உடைத்து ஆவணங்களை, சொத்து பத்திரங்களை திருடிச் சென்றனர். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். அவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா? அ.தி.மு.க தலைமை அலுவலகம் ஒன்றரை கோடி தொண்டர்களின் கோவில். வரும் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியைப் பெறும்." எனப் பேசினார்.