அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு.. முதன்முறையாக ஸ்மார்ட் போனில் எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்!
கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி மாணவர்கள் முதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதியுள்ளனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை, ஸ்மார்ட் போனில் அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார நிறுவனம், விபா நிறுவனம் மற்றும்என்.சி.இ.ஆர்.டி இணைந்து தேசிய அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்தவகையில், இந்தாண்டிற்கான இந்தத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.
அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கஞ்சனூர் அரசுப்பள்ளி தேர்வு மையத்தில், அரசுப் பள்ளி மாணவர்களோடு, மூன்று தனியார் பள்ளி மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதினர்.
அதில், அதே பள்ளியை சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 25 மாணவர்களுக்கு தேர்வு எழுத முதன்முதலாக ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டது. அம்மாணவர்கள் அதில் தங்களது தேர்வினை எழுதினர்.
இந்தத் தேர்வில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.