கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வெயில் காலத்திற்கு இடையே தொடர்ந்து 1 வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தீவிரமாக மழை பெய்து வருகிறது.
நேற்று நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இரவு முழுக்க ஊர்களில் இங்கு கனமழை பெய்தது.
ரெடியா! இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிச்சு எடுக்க போகும் கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்?
வெள்ளம்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை
கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதோடு 4வது நாளாக இந்த 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் மழை
தொடர் மழை காரணமாக இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 2000 கன அடியாக உயர்ந்தது. இதனால் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இங்கு அணை நீர்மட்டம் 48 அடியை எட்டினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். அதன்படியே தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கோடை காலத்தில் இந்த பகுதியில் இவ்வளவு மழை பெய்வது மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
பொதுவாக கோடை மழை ஒன்று, இரண்டு நாட்கள் பெய்யும். ஆனால் இந்த முறை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் இருப்பதே தெரியாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆறு அருகே யாரும் செல்ல கூடாது. அங்கே குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல கூடாது. கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று மழை
தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. இன்று, 19.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.