இந்து மகா சபை நாகராஜ் படுகொலை.. முன்பே பாதுகாப்பு கேட்டும் போலீஸ் தரவில்லையா? பரபரப்பு புகார்
கிருஷ்ணகிரி : ஓசூரில் அகில பாரத இந்து மகா சபையின் மாநில செயலாளர் நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதற்கு போலீசாரின் அலட்சியப் போக்கே காரணம் என அகில பாரத இந்து மகா சபையின் மாநில தலைவர் பாலசுப்பிரமணி குற்றஞ்சாட்டி உள்ளார். கொல்லப்பட்ட நாகராஜ் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்ட போதும், அவரது கோரிக்கையை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (52). இவர், அகில பாரத இந்து மகா சபையின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.
மேலும், வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் நாகராஜ், ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார் .
கிருஷ்ணகிரியில் பரிசோதனை
நாகராஜின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
நேரில் வந்து அஞ்சலி
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த, அகில பாரத இந்து மகா சபையின் மாநில தலைவர் பாலசுப்பிரமணி, படுகொலை செய்யப்பட்ட நாகராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கண்டுகொள்ளவில்லை
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாலசுப்பிரமணி, இந்து மகாசபை மாநில நிர்வாகி நாகராஜ் படுகொலைக்கு போலீசாரின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த ஆறு மாதமாக தனக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல் குறித்த அனைத்து விவரங்களையும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு மனு மூலம் நாகராஜ் தெரிவித்திருந்தார். பலமுறை மனு அளித்தும் தமிழக அரசோ, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையோ நாகராஜன் மனுவிற்கு செவிசாய்த்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே இன்று நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம்.
கைது செய்ய கோரிக்கை
நாகராஜ் படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் பாதிக்கப்பட்டுள்ள நாகராஜ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபை கேட்டுக் கொள்கிறது தவறும்பட்சத்தில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
சொந்த ஊரில் உடல்
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நாகராஜின் உடல், அவரது சொந்த ஊரான ஓசூருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.