ஸ்டாலின் இன்னும் நன்றாக திட்டட்டும்... ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும்.. ராமதாஸ் பேச்சு
கிருஷ்ணகிரி: ஸ்டாலின் நன்றாக எங்களை திட்டட்டும், அப்படி திட்டினால் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தற்போது மு.க.ஸ்டாலின் கோபத்தில் தன்னையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டபடி திட்டுகிறார் என்று கூறினார்.
ஸ்டாலின் இன்னும் நன்றாக எங்களை திட்டட்டும் என்றும் அப்படி திட்டினால் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும் எனவும் ராமதாஸ் பேசினார். அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க. கருணாநிதியுடன் முடிந்து போய் விட்டது. மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரீகம் தெரியாமல் மேடைக்கு மேடை உளறி வருவதாகவும் விமர்சனம் செய்தார்.
ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் தான், அமேதி தொகுதியில் போட்டியிடுவதுடன், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்று தெரியாத ராமதாஸ், அவரை பிரதமர் என்று மு.க.ஸ்டாலின் கூறுவதாக குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 100 இடங்களில் கூட வெற்றி பெறாது எனவும் ஆருடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.- பா.ம.க. தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே, வன்னியர் அறக்கட்டளை விவகாரத்தில் அவதூறாக பேசியது தொடர்பாக ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.