முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு வருத்தம்.. ‘கொஞ்சம் கூட சரியில்ல’ - புகழேந்தி சொல்றதை பாருங்க..!
கிருஷ்ணகிரி : திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி ஆதாரத்துடன் புகார் அளிப்பாரா என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனக்கு திமுக மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் ஒரே ஒரு வருத்தம் தான். நீங்கள் எடப்பாடி பழனிசாமியை கைது செய்யாமல், எஃப்.ஐ.ஆர் மட்டும் போட்டு வேடிக்கை பார்ப்பது கொஞ்சம் கூட சரியல்ல எனத் தெரிவித்துள்ளார் புகழேந்தி.
நேற்று எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்கிப் பேசிய நிலையில், கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் ஈபிஎஸ், ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் புகழேந்தி.
நீலகிரி, கோவையில் கனமழை நீடிக்கும்..6 மாவட்ட மக்களும் உஷார்..எச்சரிக்கும் வானிலை மையம்
புகார் கொடுக்கலாமே?
இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி ஆதாரத்துடன் புகார் அளிப்பாரா? இந்த ஒரு வருட காலமாக திமுக அரசு எங்கெல்லாம் ஊழல் செய்திருக்கிறது எனச் சொல்லச் சொல்லுங்கள். எந்த திட்டத்தில் எங்கு ஊழல் நடந்தது எனச் சொல்லுங்கள். ஊழல் கண்காணிப்புத்துறையில் போய் புகார் கொடுங்கள். ஏன் முடியவில்லை?
ஈபிஎஸ் ஊழல்
ஊழல் ஆட்சி என்று புகார் சொன்னால் அவர்கள் காரணம் கேட்பார்களே.. நான் ஒன்றும் திமுக அரசுக்கு சப்போர்ட் செய்யவில்லை. நியாயமாகக் கேட்கிறேன். இவர் புகார் சொன்னால், நீங்கள் ரூ.4,800 கோடி ஊழலில் மாட்டியிருக்கிறீர்களே என்று அவர்களும் கேட்பார்களே, ரூ. 600 கோடி ஊழல், துவரம் பருப்பு ஊழலில் எல்லாம் மாட்டியிருக்கிறீர்களே என்று கேட்பார்கள்.
முதல்வர் மீது வருத்தம்
எனக்கு திமுக மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் ஒரே ஒரு வருத்தம் தான். நான் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எடப்பாடி பழனிசாமியை கைது செய்யாமல், எஃப்.ஐ.ஆர் மட்டும் போட்டு வேடிக்கை பார்ப்பது கொஞ்சம் கூட சரியல்ல. மக்களும் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பதவி வெறி பிடித்து
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி, பதவி வெறி பிடித்தவர் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இறந்த பின், பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் தேவையில்லை என தீர்மானம் இயற்றிவிட்டு, அவரை அவமானப்படுத்தும் வகையில் பதவி வெறி பிடித்து பொதுச்செயலாளர் பதவிக்கு அலைந்தவர் பழனிசாமி.
பதில் சொல்லப்போவதில்லை
மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசாமல், சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே குறியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொதுநலமாக பேசி வரும் பன்னீர்செல்வம், இவர்களது விமர்சனங்களுக்கு பதில் கூறப்போவதில்லை. ஓபிஎஸ் இன்னும் கட்சிப்பணிகளை முடிக்கவில்லை. இதுவரை, 40 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லா மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் மாநாடு போல கூட்டங்களை ஓபிஎஸ் நடத்துவார்.
பதவி வெறி முனுசாமி
ஐந்து வருட ராஜ்யசபா எம்.பி பதவியை துறந்து விட்டு எம்.எல்.ஏ பதவிக்காக ஓடி வந்தவர் தான் முனுசாமி. இவரால் அதிமுக தொண்டர்கள் தான் மன உளைச்சலில் உள்ளனர். அவர் சென்ற இடம் விளங்கியதில்லை. விரைவில் பழனிசாமியை புறந்தள்ளிவிட்டு, பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க துாபம் போட்டுள்ளார் முனுசாமி" எனத் தெரிவித்துள்ளார்.