ஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி
கிருஷ்ணகிரி: பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பிஞ்சிபோன மேற்கூரை, இடிந்து விழும் நிலையிலான கட்டடம் என இருக்கும் நிலையில் சாலை வழியாக செல்லும்பொழுது கவர்ந்து இழுத்த பள்ளி சீருடையை பார்க்கும் போது இது தனியார் பள்ளியோ என்ற வியப்பை ஏற்படுத்தி வருகிறது நெடுங்கல் அரசு தொடக்கப் பள்ளி.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் நெடுங்கல் ஊராட்சியில் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில் தற்போது 64 மாணவர்கள் உள்ளனர். இங்கே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது.
அரசு கல்விக் கொள்கையில் சுற்று வட்டாரப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர்கள் உள்ளேயே ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் ஆரம்பித்ததால் தற்போது இந்தப் பள்ளியில் 64 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
4 தனியார் பள்ளிகள்
சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என நான்கு அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. போதாக்குறைக்கு அரசுப் பள்ளிகளுக்குப் போட்டியாக நான்கு தனியார் பள்ளிகளும் உள்ளன. 1954 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பள்ளி அதிக அளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து பயன் பெற்றுள்ளனர்.
50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்
கடந்த 25 ஆண்டுகளில் நெடுங்கல் தொடக்கப் பள்ளியில் படித்தவர்களில் ஒருவர் நீதிபதியாகவும் 5-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவர்களாகவும் 3 க்கும் மேற்பட்டவர்கள் வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்களாகவும் 15க்கும் மேற்பட்டவர்கள் ராணுவ வீரர்களாகவும் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாகவும் உள்ளனர்.
நன்கொடை
இவர்களை உருவாக்கிய பெருமை இந்த தொடக்கப் பள்ளிக்கு உண்டு.
எல்லாவற்றிற்கும் மேலாக 1954-ஆம் ஆண்டு நெடுங்கல் சுற்றுவட்டார பகுதியில் செங்கல் சூளைகளும் விவசாயிகளும் ஆக வாழ்ந்த மக்கள் தற்போது 85% வாழ்வாதாரத்தில் மேன்மை அடைந்ததாக கருதி இன்றளவும் ஊர் மக்கள் ஒன்று கூடி இப்பள்ளிக்கு நன்கொடையாக பல லட்ச ரூபாய்களை செலவழித்து உள்ளனர்.
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்
மேலும் கட்டடத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தும் ஸ்மார்ட் டிவி, ஜெராக்ஸ் மெஷின், குடிநீர் வசதி, ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு லட்சம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வழங்கியுள்ளனர்.
மாற்று சீருடை
அரசால் ஆரம்பிக்கப்பட்ட சுற்று வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளுக்கு இடையே போட்டி போட்டுக் கொண்டு ஊர்மக்கள் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் பள்ளியை போன்று வாரந்தோறும் மாற்று சீருடை என வழங்கியுள்ளனர்.
உற்சாகத்தில் மாணவர்கள்
அதன்படி பிங்க் நிறத்திலான டீ சர்ட்டை மாணவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அணிந்து வருகின்றனர். அந்த சீருடையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உற்சாகமாக கல்வி கற்பதிலும் விளையாட்டுகளிலும் அறிவியல் ஆய்வுகளிலும் உற்சாகமாக நேரத்தை செலவிடுகிறார்கள்.
ஊக்குவிப்பு
அருகில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 10 முதல் 20 மாணவர்களே இருக்கும் பட்சத்தில் நெடுங்கல் அரசு தொடக்கப் பள்ளியில் மட்டும் போட்டி போட்டுக் கொண்டு 64 மாணவர்களை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். அரசின் உதவியை விட ஊர் மக்கள் அரசு பள்ளியை தங்கள் பள்ளியாக நினைத்து அனைத்து விதத்திலும் கண்ணும் கருத்துமாக பார்ப்பதால் என்றென்றும் அரசே நினைத்தாலும் மூட முடியாத வண்ணம் ஊர் மக்களின் ஒத்துழைப்பு கல்வியாளர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.