முயல் பண்ணை மூலம் மாதம் ரூ.1 லட்சத்திற்கு குறையாத வருமானம்... சாதிக்கும் கிருஷ்ணகிரி இளைஞர்
கிருஷ்ணகிரி: முயல் பண்ணை மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறார் கிருஷ்ணகிரி இளைஞர் ஒருவர்.
தந்தை மேஸ்திரியாக உள்ள நிலையில், வங்கியில் கடன் பெற்று முயல் பண்ணை தொடங்கிய இவர் இன்று பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
படித்த படிப்பிற்கேற்ற பணி கிடைக்கவில்லை என வீட்டில் முடங்கிக்கிடக்காமல் பிடித்த பணியை செய்யத் தொடங்கினார் இவர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு
பி.எஸ்.சி. பட்டதாரி
கிருஷ்ணகிரியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் தனது வீட்டை ஒட்டி உள்ள இரண்டரை செண்ட் நிலத்தில் முயல் பண்ணை அமைத்து மாதம் தோறும் லட்சங்களில் வருவாய் ஈட்டி வருகிறார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படித்த இவர், பாதுகாப்புத் துறையில் பணியில் சேர்வதற்காக கடும் முயற்சிகள் மேற்கொண்டும் பலன் அளிக்காததால் முயல் பண்ணை அமைத்து தனக்கென ஒரு சொந்த தொழிலை உருவாக்கிக் கொண்டார்.
இரண்டரை லட்சம்
வெங்கடேஷின் தந்தை கட்டிட வேலை பார்க்கும் மேஸ்திரியாக உள்ளார். பெரியளவில் பின்புலம் இல்லை என்றாலும் மன தைரியமும், சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியமும் அவரை வங்கிகளில் கடன் கேட்க வைத்தது. பல வங்கிகளில் கடன் கோரிய வெங்கடேஷுக்கு, சிண்டிகேட் வங்கி இரண்டரை லட்சம் ரூபாய் வரை எந்த வித பிணையும் இல்லாமல் கடனாக அளித்து முயல் பண்ணை அமைக்க ஊக்குவித்தது. வங்கி அளித்த பணத்தை கொண்டு முயல் பண்ணைக்கான கூண்டு, ஷெட், உள்ளிட்டவைகள் அமைத்துக் கொண்டதோடு, அந்த தொகையை முதலீடாக கொண்டு பல்வேறு ரக முயல்களை வாங்கியுள்ளார்.
கறிக்கு விற்பனை
முயல் பண்ணை அமைத்தது பற்றியும் அதன் மூலம் வருமானம் ஈட்டுவது பற்றியும் நம்மிடம் பேசிய வெங்கடேஷ், '' முயல் பண்ணை அமைத்தபோது சொந்தக்காரர்களே ஏளனமாக பேசினார்கள். இப்போது லட்சங்களில் மாத வருவாய் ஈட்டி வருகிறேன். ஒரு கிலோவில் இருந்து ஒன்றே முக்கால் கிலோ வரை கறி உள்ள ஒரு முயலை விற்பனை செய்தால் ரூ.1000 முதல் ரூ.1400 வரை விலை கிடைக்கிறது. பெரும்பாலும் இது போன்று தனியாக முயலை விற்பனை செய்ய மாட்டேன். மொத்தமாக தான் விற்பேன்''.
நல்ல விலை
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''முயல் கறியை பொறுத்தவரை அதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் இதய நோயாளிகள் முதற்கொண்டு பலரும் சாப்பிடலாம். இது மற்ற இறைச்சிகளை விட மெருதுவானது. இதன் மூலமும் வருவாய் கிடைக்கிறது. இதேபோல் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் முயல்களை விற்பனை செய்து வருகிறேன். முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காக முயல்களை பயன்படுத்துகின்றன. இது மட்டுமல்லாமல் முயல் பண்ணைகள் அமைக்க விரும்புவோர், வீட்டில் வளர்க்க விரும்புவோர் என பலரும் வாங்குவதால் வருமானத்திற்கு குறைவில்லை'' என மகிழ்ச்சி ததும்ப கூறுகிறார் கிருஷ்ணகிரி இளைஞர் வெங்கடேஷ்.