"செல்போன் டவரே இல்லாத ஊரிலிருந்து வந்து.. மெடாவெர்ஸ் திருமணம் செய்றேன்!" மணமகள் நந்தினி நெகிழ்ச்சி
கிருஷ்ணகிரி: மெடாவெர்ஸ் திருமணம் (Metaverse Marriage) செய்யும் மணப்பெண் ஊரில் செல்போன் டவர் கிடையாது, எந்த தொழில்நுட்ப வசதியும் கிடையாது. ஆனாலும் நாட்டின் முதல் மெடாவெர்ஸ் திருமணம் தமிழகத்தில் நடக்கவிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
Recommended Video
இந்தியாவிலேயே முதன்முறையாக குறிப்பாக தமிழகத்தில் மெடாவெர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருமணம் நடைபெறப் போகிறது. மாப்பிள்ளை தினேஷ் மற்றும் மணமகள் ஜனக நந்தினி தங்களின் திருமணம் மற்றும் அதன் வரவேற்பு நிகழ்ச்சியை மெடாவெர்ஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மணமகள் ஜனக நந்தினி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ஜனகநந்தினி மெட்டாவெர்ஸ் திருமணம் குறித்தும், தங்கள் ஊரில் இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் அதில் பேசியுள்ளார்.
"மெடாவெர்ஸ்.." வீட்டிலிருந்தே மாய உலகில் உலவலாம்! விர்ச்சுவல் உலகை காண்பித்த டாப் மூவிஸ் #MetaVerse
பட்டதாரி
''நான் பி.டெக் பட்டதாரி. சென்னையில் உள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நான் திருமணம் செய்யவிருக்கும் தினேஷ், சென்னை ஐ.ஐ.டியில் வேலை பார்க்கிறார். நாங்கள் விர்சுவல் முறையில் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு செய்யவிருக்கிறோம். உலக நாடுகளில் இதுபோன்ற திருமணம் நடந்தாலும், இந்தியாவில் நடப்பது இதுதான் முதல்முறை. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுவர நினைத்தோம். மெடாவெர்ஸ் திருமணத்தை நாங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி.
பெண்கள் படிக்க வேண்டும்
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கிராமம் தான். கல்லூரி படிப்புக்காக முதன்முறையாக வெளியூர் சென்றேன். எங்க ஊரில் பெண்களைப் படிக்க வைக்க மாட்டார்கள். நிறைய ஊரில் இது நடக்கிறது. அதிகபட்சமாக எட்டாவது அல்லது 12வது வரை படிக்க வைக்கிறார்கள். அதற்குமேல் படிக்க வைப்பதில்லை, வேலைக்கும் அனுப்புவதில்லை. கல்யாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் என் அப்பாவுக்கு இதில் உடன்பாடு கிடையாது. அதனால் என்னை படிக்க வைத்தார். நான் தான் கல்லூரிவரை சென்று படித்த எங்கள் கிராமத்தின் முதல் பட்டதாரி. இது எனக்கும் என் அப்பாவுக்கும் பெருமையான விஷயம். நான் வேலைக்கு போய் எங்கள் கிராமத்தில் இருப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டுமென அப்பா ஆசைப்பட்டார்.
வேலைக்கு செல்வோம்
வேலைக்கு சென்ற போதுதான் வெளி உலகமே தெரிந்தது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் வெளி உலகம் தெரிய வேண்டும். நகரத்தில் பெண்களை நடத்தும் விதமும், கிராமத்தில் நடத்தும் விதமும் வேறு மாதிரி இருக்கிறது. பெண் பிள்ளைகளை சமமாகப் பார்க்க வேண்டும். ஆண்களைவிட பெண்களுக்கே கல்வி தேவை. தரமான கல்வி கிடைத்தால்தான் அவர்களால் சுயமாக இருக்க முடியும். பெண்களுக்கு கல்வி முக்கியமானது. என் அப்பாவும் எல்லோர் மாதிரியும் படிக்க வைக்காமல் என்னை திருமணம் செய்து கொடுத்திருந்தால், இந்த மாதிரி என்னால் வந்திருக்க முடியாது.
அப்பா
என்னுடைய அப்பா கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அவர் இல்லை என்றாலும், அவருடைய ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும். என்னுடைய திருமணம் குறித்து பெரிய கனவு அப்பாவுக்கு இருந்தது. அதற்குள் இறந்துவிட்டார். தற்போது என்னுடைய திருமணம் நடக்கிறது. மெட்டாவெர்ஸ் திருமணத்தில் என்னுடைய அப்பாவை தொழில்நுட்ப உதவியோடு கொண்டுவரப்போகிறோம். இந்த நாட்டுக்கே என்னுடைய திருமணம் தெரியும். அதற்கு காரணம் என் அப்பாவின் ஆசிர்வாதம்தான்.
மெட்டாவெர்ஸ் திருமணம்
என்னுடைய திருமணத்தை ஊரே பேசுகிறது. ஆனால் எங்கள் ஊரில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. நான் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்கிறேன். இங்கு எனக்கு டவர் கிடைக்காது. அதனால், நான்கு கிலோமீட்டர் பயணம் செய்து, டவர் கிடைக்கும் இடத்தில் போய் வேலை செய்கிறேன். செல்போன் பேசுவதற்கும் டவர் கிடைப்பதில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது. ஆனால் எங்களுக்கு டவரே இல்லை. கிருஷ்ணகிரியில் பல இடங்களில் டவர் வசதி கிடையாது. எங்கள் எதிர்காலத்திக் கருத்தில் கொண்டு, டவர் வசதி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
டவர்
டவர் இல்லாத கிராமத்தில் இருந்து தான், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஒரு தொழில்நுட்ப திருமணம் நடக்கிறது. டவர் கிடைத்தால், நிறையபேர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறமுடியும். நான் 12 வது படிப்பதில் இருந்து டவருக்காக போராடி வருகிறேன். செல்போனை மரத்தில் கட்டிவைத்து பயன்படுத்துகிறோம். டவர் கிடைக்காததால் பலர் ஊர்மாறி சென்றுவிட்டார்கள். மாணவர்கள் படிப்புக்கு உதவியாக இருக்கும். தயவு செய்து எங்கள் ஊருக்கு டவர் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று மணமகள் ஜனக நந்தினி வீடியோவில் கூறியிருக்கிறார்.