ஒரு மாதத்திற்கான உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்.. கிருஷ்ணகிரி திமுக மகளிர் அணி சபாஷ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று நோயை கட்டுப் படுத்த விதிக்கப்பட்டுள்ள, ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் ஒரு மாதத்திற்கான உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Recommended Video
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய தொற்று நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 25 நாள்கள் கடந்து விட்டதால், ஏழை, எளிய மக்கள் உண்ண உணவு இன்றி தவித்து வருவதை தடுக்கும் வகையில், தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்த வேண்டுகோளின்படி கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், கொரோனா தொற்று நோயால் வாழ்வாதாரம் இழந்து உள்ள ஏழை எளிய மக்களுக்கு நாள் தோறும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல இன்று கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் உணவுகள் இன்றி தவிப்பதை அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் திருமதி பரிதாநவாப் முதியோர் இல்லத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கான தேவையான உணவு வழங்கும் பணியை துவங்கி வைத்தார்.
இதேபோல முதியோர்களுக்கான வேட்டி, சேலை, முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
அப்போது கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப் மற்றும் தலைமை கழக பேச்சாளர் கனல் சுப்பிரமணி மற்றும் நூர் முகமது முனீர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.