அதிமுக, பாஜக இடையே ப்ரெண்ட்ஷிப் இல்லை.. இது தம்பிதுரையின் புதிய பேட்டி.. புதிய சர்ச்சை
கிருஷ்ணகிரி: மத்திய அரசுக்கும், அதிமுகவுக்கும் எவ்வித நட்பும் தற்போது இருப்பதாக தெரியவில்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார்.
அண்மைக்காலமாக அவர் அளித்துவரும் பேட்டிகளால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் எழுந்து வருகின்றன. லோக்சபா தேர்தல், யாருடன் கூட்டணி என அவர் கூறும் பேட்டிகள் அதிரி, புதிரியாக.. அதிமுக தலைமை விளக்கம் கொடுக்கும் அளவுக்கு சென்று வருகிறது.
இந் நிலையில் கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, மற்றொரு விவாதத்தை கிளப்பி உள்ளது. அவர் பேட்டியின் போது கூறியதாவது: தற்பொழுது வரை அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி கிடையாது. ஜெயலலிதா விட்டு சென்ற வழியில் பயணிக்கிறோம்.
கூட்டணி யாருடன்?
ஜெயலலிதா மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார். அதையே தான் பின்பற்றுகிறோம். இதுவரை கூட்டணி முடிவு எடுக்கவில்லை. செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.
மத்திய அரசு அதிகாரம்
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. ஜிஎஸ்டி வேண்டாம் என்று ஜெயலலிதா கூறினார். அதனால் நாங்களும் எதிர்த்து வாக்களித்தோம். மத்திய அரசு எல்லா அதிகாரத்தையும் எடுத்து சென்று விட்டது. இப்பொழுது எதற்கும் பணம் இல்லாமல் அவதிபட்டு வருகிறோம்.
கண்டுகொள்ளாத தேசிய கட்சிகள்
மத்திய அரசு அதிமுகவின் 34 நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமைக்காக போராடும் போது தேசிய கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
உறுப்பினர்கள் இடைநீக்கம்
ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டும் கூட்டணி பேச முன் வருகின்றனர். தார்மீக உரிமைக்காக போராடிய எங்களது உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தார்கள். சமாஜ்வாதி கட்சியையும், காங்கிரஸ் கட்சியையும் சஸ்பெண்ட் செய்யவில்லை.
கோரிக்கைக்கு ஆதரவில்லை
எங்களது உறுப்பினர்களை மீண்டும் அவைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் எங்களது உறுப்பினர்களை மீண்டும் அவைக்கு அழைக்க பாஜகவின் ஒரு உறுப்பினர்கள் கூட ஆதரவு தர வில்லை.
செயற்குழுவில் முடிவு
அப்படி என்றால் எந்த அளவில் இணக்கமாக உள்ளனர் என்பது இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சி செயற்குழு கூடி யாருடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
நட்பு இல்லை
தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை முறையாக வழங்க வேண்டும். மத்திய அரசு நட்பு கரம் நீட்டுகிறார்கள் என்றால் இந்த உதவிகளை செய்தால் தான் உண்மையான நட்பு என கருத முடியும். தற்போது அத்தகைய நட்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று தம்பிதுரை கூறினார்.