ஒரே ஒரு மாணவி... ஒரே ஒரு ஆசிரியர்... கிருஷ்ணகிரி அருகே அடடே அரசுப் பள்ளி
Recommended Video
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார்.
அனைத்து வசதிகளும் இருந்தும் இந்த அவலம் நீடிக்கிறது. தனியார் பள்ளி மோகத்தால் அரசு பள்ளியை புறக்கணிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்ட பெரிய ஜோகிப்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, தலைமை ஆசிரியர் ரேகா மற்றும் மாணவி ஸ்ரீ லேகா மட்டுமே உள்ளனர்.
அனைத்து வசதிகளும் உள்ளன
பள்ளியில் அனைத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக இரண்டு வகுப்பறைகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மைதானம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. தங்கள் நிலையை ஊரில் உள்ள மற்றவர் முன்னிலையில் உயர்த்தி காட்டிக் கொள்ளவே தனியார் பள்ளியை நாடி செல்வதாக கிராமமக்கள் சிலர் கூறுகின்றனர்.
சவால் விடும் மாணவர்கள்
ஆனால் 5-ம் வகுப்புக்கு பின்னர் தனியார் பள்ளியில் பணம் கட்ட முடியாமல் மீண்டும் அரசு பள்ளியிலேயே சேர்க்கும் நிலையும் உள்ளதாக தெரிகிறது. இப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்துவிட்டுச் சென்ற மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளனர். அதே நேரம், கல்வியை விலை போன பிறகு தரமான கல்வியை தங்களது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காவே அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
உயர் பதவி
1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெருமைமிக்க பள்ளியில் படித்த பல மாணவர்கள் தற்போது கிராம நிர்வாக அலுவலர், மருத்துவர்கள் என பல்வேறு உயர்ந்த பணிகளில் உள்ளனர். சில மாணவர்கள் உயர்கல்வி கற்று வருகின்றனர்.
புதிதாக கட்டிடம்
பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த 1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் புதிதாக இரண்டு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்படிப்பட்ட சிறப்பான பள்ளியில்கூட, குழந்தைகளை கல்வி கற்க பெற்றவர்கள் சேர்க்கவில்லை என்பது, மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தனியார் பள்ளி குறித்த மோகம் பரவி விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இப்படி ஒரு மோகம் நம்மிடம் உள்ளபோது, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக அரசையும், பள்ளி நிர்வாகங்களையும் குறை கூறி என்ன பலன்? சொல்லுங்க பார்க்கலாம்!